Pollachi Sex Assault: கடந்த சில தினங்களாக தமிழகத்தையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது பொள்ளாச்சி கூட்டு பலாத்கார வழக்கு.
நண்பன், காதலன் என நம்பி வந்தப் பெண்களை ஏமாற்றி ஆபாசப் படமெடுத்து, அவர்களை மிரட்டி பணம் பறித்த கும்பலிடம் சுமார் 200 பெண்கள் சிக்கித் தவித்துள்ளனர்.
ஆளுங்கட்சி அரசியல்வாதியின் மகன்கள் இருவர் இந்த கும்பலில் முக்கிய புள்ளிகளாக இருந்து வந்துள்ளனர் என்ற சர்ச்சையும் வெடித்துள்ளது. தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் இந்த விஷயத்தில் தமிழக எதிர்க்கட்சியான தி.மு.க உட்பட பலவேறு கட்சிகளும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றன.
ஆனால், ஆளுங்கட்சியான அ.தி.மு.க இதுவரை வாய் திறக்காதது சாமானிய மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இத்தனை சென்ஸிடிவான விஷயத்தில் மெத்தன போக்கை கடைபிடிக்கும் தமிழக அரசு, குற்றவாளிகளை தப்பிக்க வைத்து விடுமோ என்ற பயம்.
இதற்கிடையே பெற்றோர்களுக்கு இது போன்ற சம்பவங்கள், தங்கள் வீட்டு பெண் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த அச்சத்தை, கடலளவு ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யத்தில் நிறுவனருமான கமல் ஹாசன், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “அந்த பொண்ணு அலறுனத கேட்டதுல இருந்து மனசு பதறுது. அந்த குரல்ல இருந்த பயம், நண்பன்னுகூட்டிட்டு வந்தவன், தன்ன எப்படியாச்சும் காப்பாத்தி கூட்டிட்டு போய்ட மாட்டானாங்கற தவிப்பு, கண்ண மூடுற ஒவ்வொரு நிமிஷமும் காதுல கேக்குது.
நிர்பயாவுக்கு நேர்ந்த கொடுமைய எதிர்த்து உலகமே திரண்டப்போ, தமிழக முதல்வர், ‘பெண்களுக்கெதிரான குற்றங்கள் கொடூர குற்றங்களாக கருதப்பட்டு, உயர்மட்ட அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள்” அப்படின்னு அறிக்கை விட்டாங்க. அந்த பெண்மணியின் பேர்ல ஆட்சி செய்ற உங்களால எப்படி இவ்ளோ கவனக் குறைவாகவும், மெத்தனமாகவும் இருக்க முடியுது? பெண்ண பெத்த எல்லாருக்கும் பதறுதே, உங்களுக்கு பதறலயா?
குற்றம் சாட்டப்பட்டவங்களுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு சொல்றதுல இருக்க தீவிரம், குற்றவாளிகளுக்கு தமிழக அரசு தக்க தண்டனையை வழங்கும்ங்கறதுல இல்லையே?
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்றேன்னு சொன்ன தலைமையை பாக்கெட்ல வச்சிருக்க நீங்க, பெண்களுக்கு எதிரா நடக்குற இந்த அநியாயங்களுக்கு எதிரா என்ன செஞ்சு இருக்கீங்க?
உங்க அம்மாவுக்கே ஏற்பட்ட இந்த அவமானத்தை எப்படி துடைக்கப் போறீங்க சாமி?” என அவர் முதல்வருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த வீடியோவை தற்போத்யு பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.