/indian-express-tamil/media/media_files/2025/06/05/TuZk1ToWEnnbNO5jMfG3.jpg)
Pollachi Case Heats Up: Jayaraman's Defamation Suit Takes a New Turn!
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தங்களை தொடர்புபடுத்திய விவகாரத்தில் 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த வழக்கில் யூடியூப் சேனல்கள் பதிலளிக்க கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சியில் கல்லுாரி மாணவிகள் மற்றும் பெண்களை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், தங்களை தொடர்புபடுத்தி அவதூறு கருத்துகளை வெளியிட தடை விதிக்க கோரி முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அவரது மகன் பிரவீன் ஜெயராமன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த மனுவில், “பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தங்களை தொடர்பு படுத்தி நக்கீரன், அறன் செய், ஜீவா டுடே, ஜாம்பவான் உள்ளிட்ட 8 யூடியூப் சேனல்கள் அவதூறு கருத்துக்களை வெளியிட்டுள்ளன. அந்த வீடியோக்களை அகற்ற உத்தரவிட வேண்டும் எனவும், ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும். மேலும் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தங்களை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட தடை விதிக்க வேண்டும்,” என்றும் மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு இன்று (ஜூன் 5) நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது யூடியூப் சேனல்கள் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்று கொண்டு ஜூன் 12-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தார். அதுவரை இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என இரு தரப்பினருக்கும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.