முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகரும், அதிமுக தேர்தல் பிரிவு செயலாளருமான எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் தொகுதி வளர்ச்சி குறித்து மனு அளித்து நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
அந்த மனுவில், “பொள்ளாச்சி நகராட்சியில் 35ஆவது வார்டில் உள்ள ரேஷன் கடை பழுதடைந்த நிலையில் உள்ளது. இந்தக் கடையில் 35 மற்றும் 36ஆவது வார்டைச் சேர்ந்த 1300 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெற்று வருகிறார்கள்.
இதற்கு 100 அடி சாலையில் உள்ள சிறுவர் பூங்காவில் பல்நோக்கு மையம் கட்ட சட்ட சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் ஏழு லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பல்நோக்கு மையம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடம் திரவியம் என்று லேஅவுட் மேப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடம் கட்டுவதற்கு வேறு எங்கும் இடம் இல்லை எனவே மேற்கண்ட இடத்திற்கு தாங்கள் முன் அனுமதி வழங்கி பல்நோக்கு மையம் கட்டிடம் கட்டுவதற்கு உதவிட வேண்டும்,
கிணத்துக்கடவு ஒன்றியம் காட்டம்பட்டி ஊராட்சி தாசன் நாயக்கன் பாளையம் கிராமத்தில் ஊர் கட்டு விநாயகர் கோவில் மயான கரை செல்லும் சாலை முதல் மெட்டுவாவி செல்லும் வரை தார் சாலை அமைத்து தர வேண்டும்
கிணத்துக்கடவு வடக்கு ஒன்றியம் வடசித்தூர் ஊராட்சி, வடசித்தூர் கிராமத்தில் ஆரம்ப சுகாதாரம் நிலையம் முதல் வெள்ளேகவுண்டன் புதூர் சாலை வரை ஈரடுக்கு மெட்டல் சாலை அமைத்து தர வேண்டும்.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் சேர்வக்காரன் பாளையம் ஊராட்சி எஸ் குமாரபாளையம் செல்லும் சாலையில் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும்
கிணத்துக்கடவு ஒன்றியம் முள்ளம்பாடி கிராமத்தில் மாகாளியம்மன் கோவில் முதல் காளியண்ணன் புதூர் செல்லும் சாலையை தார் சாலை அமைத்துதர வேண்டும்” என வலியுறுத்தி இருந்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், “கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதி முழுவதும் தென்னை விவசாயம் சார்ந்த பகுதி தேங்காய் விலை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சரிந்து பரிதாபகரமான நிலையில் உள்ளது.
இதனால், விவசாயிகள் வேதனை அடைந்து வருகிறார்கள். இதற்கிடையில், கொப்பரை கொள்முதல் நிறுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே, ரூ.150 முதல் கொள்முதல் செய்து வந்தார்கள்.
அதையும் நிறுத்தி விட்டார்கள். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளேன். அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டு ஒப்பந்தம் கோரி அந்தப் பணிகள் தற்பொழுது ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு பொள்ளாச்சி கோவை மற்றும் பாதை பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளது.
அதுபோல பொள்ளாச்சி மேற்கு புறவழிச் சாலை பணி பாதி நடந்த நிலையில் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.
குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கணிக்கன் பட்டி கிராமத்தில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் பூர்த்தியாகாமல் அப்படியே நிலுவையில் கிடக்கின்றன.
இதுபோன்று கிடப்பில் இருக்கும் வேலைகளை அரசியல் நோக்கம் இன்றி விரைந்து முடித்து ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையிலும் விவசாயிகள் பயன்பெறும் வகையிலும் செய்து தர வேண்டும்” என்றார் பொள்ளாச்சி ஜெயராமன்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil