புதுச்சேரி ரெயின்போ நகர் பகுதியில் பிரபல ரவுடி மகன் உட்பட 3 வாலிபர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி ரெயின்போ நகர் 7வது குறுக்கு தெருவில் டிவி நகரை சேர்ந்த பிரபல ரவுடி சத்யாவின் வீடு உள்ளது. கொலை உட்பட பல்வேறு வழக்குகளை உள்ள சத்தியா அங்கு இல்லாததால் தற்போது அந்த வீடு காலி மனையாக உள்ளது.
இந்த நிலையில் இன்று காலை அந்த வீட்டில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் 3 வாலிபர்கள் கிடப்பதாக அப்பகுதி மக்கள் பெரியகடை போலிசாருக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்து போது 2 வாலிபர்கள் உயிரழந்த நிலையில் சடலமாக இருந்தனர்.
ஆபத்தான நிலையில் இருந்த ஒருவரை மீட்டு போலிசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அவரும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இது தொடர்பாக டிஜிபி சத்தியசுந்தரம், சீனியர் எஸ்பி கலைவாணன் தலைமையில் முத்தியால்பேட்டை,பெரியக்கடை மற்றும் குற்றப்பிரிவு காவலர்கள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இறந்தது பிரபல ரவுடி தெஸ்தானின் மகன் ரிஷி, திடீர் நகரை சேர்ந்த தேவா,ஜெ.ஜெ நகரை சேர்ந்த ஆதி என்பது தெரிய வந்தது. இதனிடையே தகவலறிந்த உயிரிழந்தவர்களை குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும் விசாரணையில் டிவி நகரை சேர்ந்த பிரபல ரவுடி சத்யா கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது. இந்த கொலையை அவர் மட்டும் செய்தாரா? கூட்டாளிகளுடன் சேர்ந்து செய்தாரா? என பல்வேறு கோணங்களில் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் அதிகாலையில் வாலிபர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி