கொரோனா தொற்றுக்கு மத்தியில் பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது. பொங்கலுக்கு நகரங்களில் இருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு அரசாங்கத்தால் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. போதுமான போக்குவரத்தை உறுதி செய்ய ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டன.
பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் பயணிக்க அதிக கட்டணம் வசூலிக்கப்படும். அதனை தடுக்கும் பொருட்டு அரசு, அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. ஆனாலும் இந்த முறையும் 250க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்ததை அரசு கண்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த 6 நாட்களில் இந்த பேருந்து இயக்கும் நிறுவனங்களிடம் இருந்து ரூ. 5.6 லட்சம் வரை காம்பவுண்டிங் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநிலம் முழுவதும் கட்டணங்கள் தொடர்பாக ஆய்வு நடத்த 12 குழுக்கள் அமைக்கப்பட்டன. அவர்களின் சோதனைகளின் போது நிறைய பேருந்துகள் முறையாக வரி கட்டவில்லை என்பது தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து ரூ. 11 லட்சம் அபராதம் பெறப்பட்டது. அதே போன்று 6 பேருந்துகளில் உரிமம் தொடர்பான விதிமுறை மீறல்களும் கண்டறியப்பட்டது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
தங்களின் சொந்த ஊர்களில் இருந்து மீண்டும் பணிக்காக நகரங்களுக்கு மக்கள் திரும்ப உள்ளனர் என்பதால் அடுத்த 3 நாட்களுக்கும் ஆம்னி பேருந்துகளில் சோதனை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை உங்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று தெரியும் பட்சத்தில் தமிழக அரசின் உதவி மையத்திற்கு 1800 425 6151 அழைத்து உங்களின் புகார்களை நீங்கள் பதிவு செய்யலாம்.
பொதுமக்கள் அரசின் இந்த செயல்பாடுகளை வரவேற்று உள்ளனர். தமிழ்நாடு மோட்டர் வாகன சட்டம் 1989-ன் படி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பயணிகளுக்கான கட்டணத்தை தாங்களே முடிவு செய்து கொள்ளலாம். இதில் அரசின் தலையீடு பெரிய அளவில் இருக்கமுடியாது. ஆனால் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரும் பட்சத்தில் அரசு கட்டணங்களை சீர்படுத்த இயலும்.
இது தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாகர்களும் தங்களின் கவலைகளை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கொரோனா பெருந்தொற்று காரணமாக இருக்கும் பேருந்துகளில் மூன்றில் 1 பங்கு மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. அதில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. எங்களின் பேருந்துகளையும் அரசே எடுத்து நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தாலும் போக்குவரத்து கழக சங்கத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வும் அதிக கட்டணத்திற்கு காரணம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.