அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் கொண்டாட்டத்திற்காக தொடர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரயில்களில் பயணிக்க முன்பதிவு டிக்கெட்டுகள் தீர்ந்துவிட்ட நிலையில், மக்கள் ஆம்னி பஸ்களில் பயணிப்பது வழக்கம்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டாலும் பெரும்பாலான பயணிகள் கிளாம்பாக்கம் சென்று அரசு பஸ்களை பிடிக்க வேண்டும் என்பதால் கோயம்பேட்டில் ஆம்னி பஸ்களில் செல்கின்றனர்.
இதனால் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ஆம்னி பஸ்களின் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அந்த வகையில் முன்பதிவுகளும் கடந்த சில நாட்களாகவே நடந்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்லும் சில ஆம்னி பேருந்துகளில் ரூ.4,000 கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதே போன்று, மேற்கு மாவட்டமான கோவைக்கு அதிகபட்சமாக ரூ.2,850 வசூலிக்கப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க பயணிகள் தெரிவிக்கின்றனர்.
தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது. அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற அறிவிப்பை மீறியும் அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“