பொங்கல் திருநாளையொட்டி, தமிழகத்தில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதால், எப்போதும்போல மது விற்பனை சூடு பிடித்தது. இதுகுறித்து மாநில வாணிபக் குழு (டாஸ்மாக்) தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முழுவதும் உள்ள மது விற்பனை நிலையங்களில் ஜனவரி 13 முதல் 16 வரையிலான பொங்கல் விடுமுறை நாள்களில் ரூ.725.56 கோடி மதிப்பில் மதுபானங்கள் விற்கப்பட்டன. கடந்தாண்டு பொங்கல் நாள்களில் ரூ.678.65 கோடிக்கு விற்கப்பட்ட நிலையில், இந்தாண்டில் ரூ.46 கோடி அதிகமாக விற்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் சராசரியாக தினசரி விற்பனை சுமார் ரூ.145 கோடியாகவும், 3 நாள்களில் மட்டும் தினசரி விற்பனையில் 67 சதவிகிதம் உயர்ந்து ரூ. 241.85 கோடிக்கு மதுபானங்கள் விற்கப்பட்டன.
பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான ஜனவரி 13 ஆம் தேதியில் இருந்து 4 லட்சம் அட்டைப்பெட்டிகள் பீர் வகைகளும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டுவகை மதுபானங்கள் 8.5 லட்சம் அட்டைப்பெட்டிகளும் விற்கப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகை மது விற்பனையில் ரூ.179 கோடி விற்பனையுடன் திருச்சி மாவட்டம் முதலிடத்திலும், சேலம் மாவட்டம் ரூ. 151.50 கோடி விற்பனையுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ. 142 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
எப்போதும்போல அனைத்து மாவட்டங்களிலும் மது விற்பனை அதிகரித்த நிலையில், இந்தாண்டில் மதுரை மாவட்டம் மது விற்பனையில் வளர்ச்சியை காட்டவில்லை. ஆனால், மது விற்பனையில் எப்போதும் முதலிடத்தைப் பிடிக்கும் மதுரை, இந்தாண்டில் தவற விட்டுவிட்டது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ.149.55 கோடி மட்டுமே விற்பனையாகியுள்ளன.
செய்தி: க.சண்முகவடிவேல்.