பொங்கல் கொண்டாட்டத்தையொட்டி தமிழக அரசு சார்பில் பொங்கல் திருவிழாவிற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, இலவச வேட்டி, சேலைகள் மற்றும் ரொக்கப் பணம் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி 2025ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "2025 ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள். மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் குறித்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனவரி 3ஆம் தேதி முதல் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன்கள் வீடு வீடாக விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2.21 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு வழங்கப்படுவதாகவும் பொங்கல் தொகுப்புடன் இலவச வேஷ்டி, சேலைகள் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ரேஷன் கடைகளில் ஜனவரி 9ஆம் தேதியில் இருந்து பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“