பூந்தமல்லி - பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தட திட்டத்தை இருகட்டங்களாக செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில், பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் வரையிலான 52.94 கிலோமீட்டர் தூர மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரை மக்கள் பயன்பாட்டிற்கான துரித போக்குவரத்து அமைப்பை (MRTS) பரிந்துரை செய்வதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை, தமிழ்நாடு அரசிடம் கடந்த 2024-ம் ஆண்டு சமர்பிக்கப்பட்டது.
இந்த வழித்தடம் தோராயமாக 52.94 கி.மீ நீளத்திற்கு 19 உயர்நிலை மெட்ரோ நிலையத்துடன் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதற் கட்டமாக, பூந்தமல்லியில் இருந்து சுங்குவார்சத்திரம் வரையிலான 27 கிலோமீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட மெட்ரோ மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான மதிப்பீடு ரூ.8,779 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி, விரைவான நகரமயமாக்கலைச் சந்தித்து வரும் ஒரு முக்கிய வழித்தடமாகும், இது அப்பகுதி மக்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமையும்.
பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையம் மற்றும் திருமழிசையில் முன்மொழியப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த மெட்ரோ ரயில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களுக்கு நேரடி மெட்ரோ இணைப்பு, பயணிகளுக்கு பெரும் வசதியை ஏற்படுத்தும். மேலும், இது வணிக மற்றும் குடியிருப்பு வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.