இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விமான சாகச காட்சி நடைபெற்றது. இந்த சாகச நிகழ்ச்சியை கண்டு களிக்க லட்சக்கணக்கான மக்கள் பெருந்திரளாக திரண்டனர். 15 லட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியை நேரில் வந்து பார்த்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மெரினா கடற்கரையில் ஏராளமான மக்கள் திரண்டதால் பலரும் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்துள்ளார்கள். வெப்பம் ஒருபுறம் தாக்க, குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் பலரும் தாவித்துள்ளனர். இதனால், பலரும் அங்கேயே மயக்கமடைந்துள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கிவர்களில் 90-க்கும் பல்வேறு காரணங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த இக்கட்டான சூழலில் சிக்கித் தவித்த 5 பேர் பரிதமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் ஏற்பட்ட மரணங்களுக்கு காரணம் உச்சபட்ச வெட் பல்ப் டெம்பரேச்சர் தான் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் காலநிலை மாற்றம் அல்லது ஈரமான குமிழ் வெப்பநிலையின் தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள தவறிவிட்டனர் என்றும் கூறியுள்ளது.
இது தொடர்பாக தன்னார்வ தொண்டு நிறுவனமான பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுற்றுச்சூழல் பொறியாளர் பிரபாகரன் வீரஅரசு பேசுகையில், "நுங்கம்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை 70 சதவீத ஈரப்பதத்துடன் 34.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது 42 டிகிரி செல்சியஸ் போல உணரப்படும்.
இதற்கு வெட் பல்ப் டெம்பரேச்சர் முக்கிய காரணமாகும். ஈரமான குமிழ் வெப்பநிலை 30 டிகிரி அடையும் போது, அது வெப்பம் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும். விமானப்படை நிகழ்ச்சியின் போது ஈரமான குமிழ் வெப்பநிலை 30.1 டிகிரியாக இருந்தது. அதிக ஈரமான குமிழ் வெப்பநிலையில், மனித உடல் வியர்வை மற்றும் குளிர்ச்சியடையும் திறனை இழக்கும்.
பெரிய நிகழ்வுகளைத் திட்டமிடும்போது காலநிலை மாற்றக் காரணியை அதிகாரிகள் கருத்தில் கொள்ளவில்லை. விமானப்படை நிகழ்ச்சி தோல்வி என்பதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். 10 லட்சம் பேர் திரண்டதால் அந்த இடத்தில் வெப்பநிலை 2 டிகிரி அதிகரித்திருக்கலாம். இடத்திற்கான நேரமும் இடமும் தவறாக இருந்தது.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சிஎஸ்இ) நடத்திய ஆய்வில், கோடைகால சராசரி வெப்பக் குறியீடு 37 டிகிரியுடன் நாட்டிலேயே அதிக வெப்பமான பெரிய நகரமாக சென்னை இருப்பதாகக் கூறியிருக்கிறது. சென்னையின் வெப்பக் குறியீட்டில் ஈரப்பதத்தின் தாக்கம் 6.9 டிகிரியாக உள்ளது." என்றும் அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“