தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்
பி ஆர் பாண்டியன் இன்று (ஜூலை 24) பட்டுக்கோட்டை ஒருங்கிணைந்த தென்னை வளாகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் தேங்காய் விலை கிடைக்காமல் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
50 ரூபாய் வரையிலும் விற்ற தேங்காய் தற்போது 6 ரூபாய்க்கு வாங்குவதற்கு ஆள் இல்லாமல் சாலையில் கொட்டி போராடி வருகிறார்கள்.
இந்நிலையில் தேங்காய் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றம் செய்து சந்தைப்படுத்துவதற்கான வகையில் தமிழகத்தில் முதன் முதலாக பட்டுக்கோட்டை ஒருங்கிணைந்த தென்னை வளாகத்தில் மத்திய அரசின் நிதி உதவியில் 5.25 கோடி ரூபாய் பெற்று தனியார் நிறுவனத்திடம் இயந்திரம் பொருத்துவதற்கு தமிழ்நாடு அரசு வேளாண்மை சந்தைபடுத்தும் துறை அனுமதி வழங்கியுள்ளது.
அதன் அடிப்படையில் தற்போது இயந்திரங்கள் பொருத்தும் பணி வேளாண்துறை பொறியியல் பிரிவுக் கண்காணிப்பில் நிறைவு பெற்றுள்ளது. இயந்திரம் முழுமையும் கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதியில் இருந்து வேறொரு தொழிற்சாலையில் இருந்த இயந்திரங்களை இங்கு கொண்டு வந்து பழைய தொழில்நுட்பத்திலான பழமையான இயந்திரத்தை பொருத்தியுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதன் மூலம் மிகப்பெரும் ஊழல் முறைகேடு செய்துள்ளதாக தெரிய வருகிறது. புதிய இயந்திரத்தை கொண்டு நாள் ஒன்றுக்கு 25000ம் தேங்காய்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றம் செய்வதற்கான திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போதைய நிலையில் அமைக்கப்பட்டுள்ள இயந்திரங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 1500 தேங்காய்கள் மட்டுமே மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்றம் செய்ய முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மத்திய, மாநில அரசுகள் உரிய தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொண்டு விவசாயிகளுக்கு ஊழல் முறைகேடுகள் இல்லாமல் நவீன தொழில்நுட்பத்தில் நவீன இயந்திரம் பொருத்தி இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி பட்டுக்கோட்டை தென்னை வளாகத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகளுடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் எம் செந்தில்குமார். திருவோணம் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன்,மதுக்கூர் ஒன்றிய தலைவர் அருள்சாமி, துணை தலைவர் மாரிமுத்து, பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர் மணிவாசகன், ஒன்றிய செயலாளர் சுந்தரமுருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள், விவசாயிகள் உடன் இருந்தனர்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“