க. சண்முகவடிவேல்
Thanjavur | Lok Sabha Election: தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட அவசர நிர்வாகிகள் கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் வி எஸ் வீரப்பன் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற மாநில பொதுச் செயலாளர் பிஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
தமிழ்நாட்டில் தி.மு.க அரசு அமைந்த பிறகு விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகள் தீவிரம் அடைந்து வருகிறது. காவிரி டெல்டாவில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தையே முடக்க நினைக்கிறது. காவிரியின் குறுக்கே மேகதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக அரசிற்கு ஆதரவாக மத்திய அரசோடு கூட்டு சேர்ந்து துணை போகிறது. காவிரி டெல்டா விவசாயத்தை அழித்துவிட்டு கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மறைமுகமாக மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக பாதுகாக்கப்பட்ட . வேளாண் மண்டலத்தில் நாகப்பட்டினத்தை பெட்ரோலிய ரசாயன மண்டலமாக அறிவிக்க முயற்சித்தது. ஒஎன்ஜிசிக்கு ஆதரவாக ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கு மறைமுகத் துணை போகிறது. எரிவாயுவை பயன்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களை களமிறக்குவதற்கு அனுமதிக்கிறது.நிலக்கரி மீத்தேன் எடுப்பதற்கு தொடர்ந்து மறைமுக முயற்ச்சியில் ஈடுபடுகிறது.
காவிரி பாசன பகுதி வறண்டு கிடக்கிறது முதலமைச்சர் இதுவரையிலும் காவிரி பிரச்சனை குறித்து பேசுவதற்கு மறுக்கிறார். தொடர்ந்து மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் விரோத சட்டத்தை விட மோசமான தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை கொண்டு வந்து விவசாயிகளை ஒடுக்க நினைக்கிறார். தன் நிலத்தை கொடுக்க மறுக்கும் விவசாயிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கிறார். விவசாயிகள் பெற்று வந்த பல்வேறு சலுகைகள் பறிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் நெல்லுக்கு ரூபாய் 2500 ம் கரும்பு டன் ஒன்று 4 ஆயிரம் கொடுக்க மறுத்து விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார். குருவைக்கான காப்பீடு திட்டத்தை ரத்து செய்துவிட்டார். காப்பீட்டு நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்து விவசாயிகள் பெயரில் ஒதுக்கப்படுகிற நிதி ஊழல் முறைகேடு செய்வதற்கு வழிவகுக்கிறது.
நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு நிலங்களைப் பெற்ற நிறுவனம் தற்போது அணுமின் நிலையம் அமைப்பதற்கு அறிவிப்பை செய்கிறபோதும்,தனியாருக்கு பங்கு விற்பனை நடத்துவதற்கு எடுக்கிற முயற்சிக்கும் முதலமைச்சர் எதிர்த்து குரல் கொடுக்க முன்வரவில்லை. மறைமுகமாக நிலக்கரி சுரங்க நிறுவனத்திற்கு துணை போகிறார்.
ஒட்டுமொத்தமாக மோடி அரசை விட மோசமான அரசாக திமுக அரசு மாறிவருகிறது. எனவே பாஜகவிற்கும் திமுகவிற்கும் வாக்களிப்பது ஒன்றுதான் என்கிற மனநிலையில் விவசாயிகள் திமுக அரசுக்கு எதிரான நடவடிக்கையில் களமிறங்கி உள்ளனர். தேசிய அளவில் ஆட்சி மாற்றம் தேவை என்கிற வலிமையான போராட்ட களத்தில் திமுகவையும் எதிர்க்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
டெல்லி போராட்ட களத்தில் விவசாயிகளை மோடி அரசு துப்பாக்கியாச்சுட்டு படுகொலை செய்கிற போது தட்டிக் கேட்கவோ, விவசாயிகளுக்கு ஆதரவாக போராடுவோ, தமிழ்நாடு முதலமைச்சர் முன்வரவில்லை. சட்டமன்றத்தில் துப்பாக்கி சூட்டுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்ற வில்லை. எனவே திமுக அரசையும் ஆட்சியையும் எதிர்க்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். அதனை வெளிப்படுத்துகிற விதமாக தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் வடக்கு மாவட்ட தலைவர் காவலூர் செந்தில்குமார் வேட்பாளராக களம் இறக்குவது என முடிவெடுத்துள்ளோம். விவசாயிகளின் பேராதரோடு வெற்றியை வாக்காளர்கள் உறுதி செய்வார்கள். அதற்கான வகையில் விவசாயிகள் ஒன்றுபட்டு செயல்பட முடிவெடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
யார் இந்த செந்தில்குமார்?
![](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/indian-express-tamil/media/post_attachments/60ef1503-0f7.jpg)
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி வேட்டாளர் என். செந்தில்குமார் காவலூர் ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தலைவராவார். இவருக்கு எஸ் ராணி என்ற மனைவியும் ஸ்ரீஜனனி என்ற மகளும், எஸ் திருமுருகன் என்ற மகனும் உள்ளனர். தஞ்சாவூர் நகரத்தில் வசித்து வருகிறார். சிறந்த சேவையாளர் தொகுதி முழுமையிலும் நன்கு அறிமுகமானவராக உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“