/indian-express-tamil/media/media_files/2025/09/12/pr-pandian-petition-2025-09-12-18-27-58.jpg)
தமிழகத்தில் சிப்காட், சிட்கோ அமைக்கிறோம் என்கிற பெயரில் வேளாண் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான ஆராய்ச்சி நிலங்களை கைப்பற்றுவதும், கால்நடை பண்ணைகளை அபகரிப்பதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. என்று பி.ஆர். பாண்டியன் கூறினார்.
தஞ்சாவூர் நடுவூர் கால்நடை பண்ணையை சிப்காட் ஆக மாற்றுவதை கைவிட வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் பொதுச் செயலாளர்
பி ஆர் பாண்டியன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நடுவே செய்தியாளர்களிடம் பி.ஆர். பாண்டியன் தெரிவித்ததாவது: தமிழகத்தில் சிப்காட், சிட்கோ அமைக்கிறோம் என்கிற பெயரில் வேளாண் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான ஆராய்ச்சி நிலங்களை கைப்பற்றுவதும், கால்நடை பண்ணைகளை அபகரிப்பதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
குறிப்பாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளம் வேளாண் பல்கலைக்கழக தென் மண்டல ஆராய்ச்சி நிலையத்திற்கு சொந்தமான 205 ஏக்கர் நிலத்தை கைப்பற்றி சிப்காட் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர். இதனை எதிர்த்து போராட்டம் நடத்திய பிறகு திட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு திருவாரூர் மாவட்டம் கொருக்கை கால்நடை பண்ணைக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைப்பதற்கு முயற்சி எடுத்தனர். விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் திட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் கால்நடை கல்லூரி செயல்பட்டு வருகிறது. அதன் அருகே நடுவூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை ஆராய்ச்சி பண்ணைக்கு சொந்தமான 1700 ஏக்கர் நிலத்தில் எருமை,பசு உள்ளிட்ட காளைகள் ஆயிரக்கணக்கில் வளர்க்கப்பட்டு ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
அப்பண்ணைக்கு சொந்தமான விளை நிலங்கள் 500 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சிப்காட் மற்றும் சிட்கோ அமைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இதனை வன்மையாக கண்டிக்கிறோம். சிப்காட் அமைப்பதை கைவிட வேண்டும்.
ஏற்கனவே திமுக தனது 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் கூடுதலான பல்கலைக்கழகங்கள் மற்றும் வேளாண் கல்லூரிகள் திறக்கப்பட்டு வேளாண்மையை ஊக்கப்படுத்துவோம், மேம்படுத்துவோம் என்று கூறிவிட்டு தற்போது ஆராய்ச்சி பண்ணைகளையும் கால்நடை பண்ணைகளையும் அழிக்க நினைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை அனுமதிக்க மாட்டோம்.
எனவே, முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு சிப்காட் அமைப்பதை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பனையை இன்றைய தேவைக்கு ஏற்ப மேம்படுத்திட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த விரைவில் தமிழகம் தழுவிய மாநாடு அப்பகுதியில் நடத்த உள்ளோம். அடுத்த கட்ட தொடர் போராட்டத்தை மாநாட்டில் அறிவிப்போம் என்றார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் ஆர்.திருப்பதி வண்டியார், தஞ்சை மண்டல தலைவர் துரை பாஸ்கரன், மாநில இளைஞரணி செயலாளர் ஒரத்தநாடு மகேஸ்வரன் / திருவாரூர் மாவட்ட செயலாளர் குடவாசல் சரவணன், தஞ்சாவூர் மாவட்ட தலைவர் ஊரணிபுரம் ரவிச்சந்திரன், செயலாளர் பிரபாகரன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பத்மநாபன், இயற்கை விவசாயி சதீஷ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முன்னதாக, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, விவசாயிகள் நடுவூர் கால்நடை பண்ணையையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.