தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் தெரிவித்திருப்பதாவது:
தஞ்சாவூர் மாவட்டம் திருமன்னங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலைக்கு கரும்பு சாகுபடி பயிரிட்ட விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்காமல் 7 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளது. மேலும் கரும்பு பயிரிட்ட விவசாயிகள் பெயரில் ரூபாய் 600 கோடிக்கு மேல் வங்கிகளில் போலியாக கடன் பெற்று ஆருரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் மோசடி செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் கருப்பு பட்டியலில் இணைக்கப்பட்டு கடன் பெறாத முடியாத நிலையில் பாதிக்கப்பட்டு
தொடர்ந்து மூன்றாண்டு காலமாக ஆலை வாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல முறை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களிடத்தில் நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளனர். இதன் அடிப்படையில் மாநில வங்கியாளர் கூட்டத்தில் மத்திய அரசின் நிதித்துறை மூலமாக விவசாயிகள் பேரில் போலியாக கடன் பெற்று அதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கருப்பு பட்டியில் இணைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை மத்திய அரசுக்கு முதலமைச்சர் அனுப்பி வைத்து தீர்வு காணாமல் காலம் கடத்துகிறார். மேலும், கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்காமல் நிலுவையில் உள்ள தொகைக்கு வட்டி போட்டு உடனடியாக வழங்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
இந்நிலையில், ஆரூரான் சர்க்கரை ஆலை நிறுவனத்தை ஆளுங்கட்சியை சார்ந்தவர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக விலைக்கு வாங்கி மது உற்பத்தி ஆலையாக மாற்றிவிட்டனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய முதலமைச்சர் தீர்வு காண முயற்சிக்கவில்லை. இந்நிலையில் மனமுடைந்த விவசாயிகள் இன்று தஞ்சைக்கு வருகை தந்த முதலமைச்சரா சந்தித்து முறையிட அனுமதி கேட்டனர். உரிய முறையில் கடிதம் கொடுத்து காத்திருந்தனர்.
இந் நிலையில் முதலமைச்சர் சந்திப்பை தவிர்த்துவிட்டு புறப்பட தயாரான போது ஆத்திரமடைந்த விவசாயிகள் தஞ்சாவூரில் கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை காவல்துறை கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைக்கு உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழ்நாடு முதலமைச்சர் தனக்கு எதிராக போராடுவதாக காவல்துறையை வைத்து கைது செய்து அச்சுறுத்துவது வன்மையாக கண்டிக்கதக்கது. எனவே உடனடியாக நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
செய்தி: க.சண்முகவடிவேல்.