/indian-express-tamil/media/media_files/2025/09/04/premalatha-vijayakanth-explain-saying-about-edappadi-k-palaniswami-tamil-news-2025-09-04-11-19-47.jpg)
'அண்ணன் எடப்பாடியார் முதுகில் குத்திவிட்டதாக நான் சொல்லாத விஷயங்களை சொன்னதாக தொலைக்காட்சிகளில் செய்தி பரவுகிறது. அது தவறான விஷயம்." என்று தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் நடைபெற்ற காஞ்சி தே.மு.தி.க கழக மாவட்ட செயலாளர் இராஜேந்திரன் இல்ல மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மணமக்களை வாழ்த்தினார். இதன்பின்னர் செய்தியாளர்கள் சந்தித்துப் பேசிய பிரேமலதா விஜயகாந்த் 'அண்ணன் எடப்பாடியார் முதுகில் குத்திவிட்டதாக நான் சொல்லாத விஷயங்களை சொன்னதாக தொலைக்காட்சிகளில் செய்தி பரவுகிறது. அது தவறான விஷயம். அந்த வார்த்தை என் வாயில் வரவே வராது' என்று கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் பேசுகையில், “உள்ளம் தேடி இல்ல நாடி” என்ற முதல் சுற்றுப்பயணம் வெற்றிகரமாகவும் மக்களுடைய ஆதரவோடும் மிக சிறப்பாக நடைபெற்றது. மீண்டும் 2-ம் கட்ட பயணம் நாளை (அதாவது இன்று) தொடங்கி 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. எங்கு சென்றாலும் மக்கள் மிகச் சிறப்பான வரவேற்பு அளித்தார்கள்.
நான் பலமுறை எங்கள் கட்சி கூட்டணி குறித்து கூறிவிட்டேன் கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணியை பற்றி அறிவிப்பேன். நான் சொல்லாதது செய்தியாக வருகிறது. எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்தி விட்டார் என நான் சொல்லாததை அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வந்துள்ளன. நான் அப்படி பேசவே இல்லை. இவை அனைத்தும் முற்றிலும் தவறான செய்தி. அது தவறான விஷயம். அந்த வார்த்தை என் வாயில் வரவே வராது.
எங்கள் கட்சி நிர்வாகிக்குள் பேசுவதை, நீங்கள் நான் பேசியதாக போடுவது மிகவும் கண்டனத்துக்குரியது. தேமுதிக சார்பில் இதை வன்மையாக கண்டிக்கிறேன். நான் சொல்லாததை சொல்வதாக நீங்கள் செய்தி வெளியிட்டால் இனி பத்திரிக்கையாளர்களை சந்திக்க மாட்டேன்." என்று தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.