தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து, பின்னாளில் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பி, தமிழ்நாட்டின் சட்டசபையில் எதிர்க் கட்சித் தலைவராக செயல்பட்டவர் விஜயகாந்த். அவர் நிறுவிய தே.மு.தி.க-வில் பொருளாளர் இருப்பவர் எல்.கே.சுதீஷ். இந்நிலையில் சுதீஷ் இன்று தனது பேஸ் புக் தளப் பதிவில் அ.தி.மு.க தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுடன் பிரேமலதா உள்ளது போன்ற புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டார். அந்தப் பதிவில் அவர் புகைப்படம் தொடர்பாக எதுவும் பதிவிடவில்லை.
அவர் வெளியிட்ட இந்தப் புகைப்படத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன் பிரேமலதா விஜயகாந்த் படத்தை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று கூறியிருந்த நிலையில், தற்போது அ.தி.மு.க தலைவர் ஜெயலலிதாவுடன் பிரேமலதா இருப்பது போன்ற புகைப்படத்தை அவரது தம்பி சுதீஷ் வெளியிட்டு இருப்பது பெரும் பேசுபொருளாகமாறியது. இந்த நிலையில், இந்தப் புகைப்படம் விவகாரம் தொடர்பாக தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் 10-வது நாளாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் ஆதரவு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர் சந்தித்துப் பேசிய அவர், "தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தொடரும் என தூய்மைப்பணியாளர்கள் கூறினர். அரசு தெரிவித்தப்படி பணி நிரந்தரம், ரூ.23,000 ஊதியத்தை வழங்க வேண்டும். எல்லாம் தனியார் மயம் என்றால் ஆட்சியையும் தனியார் மயமாக்கி விடலாமா? வரி வசூலிப்பது அரசு, அரசை தனியார்மயமாக்க முடியுமா? தனியார் மயமாக்குவதை தேமுதிக கண்டிக்கிறது.
ஜெயலலிதா ஒரு சாதனைப்பெண்மணி, இரும்புப்பெண்மணி. ஜெயலலிதா இடத்தை வேறு யாரும் நிரப்ப முடியாது. ஒரு எம்.ஜி.ஆர், ஒரு ஜெயலலிதாதான். ஜெயலலிதா போன்று சிங்கப்பெண்ணாக நான் இருப்பதாக சுதீஷ் கூறியிருந்தார். தமிழ்நாட்டில் பல சவால்களை சந்தித்த ஜெயலலிதா என் ரோல் மாடல் என கூறியிருக்கிறேன். எம்.ஜி.ஆரை மானசீக குருவாக அறிவித்தவர் விஜயகாந்த். கேப்டனை மானசீக குரு என சொல்பவர்கள் அவரது படத்தை புகைப்படத்தை பயன்படுத்தலாம்." என்று அவர் கூறியுள்ளார்.