/indian-express-tamil/media/media_files/2025/09/15/premalatha-vijayakanth-on-dmdk-alliance-partner-for-upcoming-2026-polls-tamil-news-2025-09-15-15-25-27.jpg)
"விஜயகாந்த் இல்லாமல் நாங்கள் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் எங்களுடைய கட்சி வளர்ச்சியில் தான் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்." என்று தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சிந்தாமணி அருகே உள்ள அண்ணா சிலைக்கு தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் திமுக அதிமுக மற்றும் தேமுதிக மூன்று கட்சிகளுக்கு தான் பூத் கமிட்டி உள்ளது. உச்ச நட்சத்திரங்களுக்கு மக்கள் கூட்டம் கூடுவது இயல்புதான். இதை நாங்கள் 1990 களில் இருந்து பார்த்து வருகிறோம். விஜயகாந்திருக்கும் அதிக அளவிற்கு கூட்டம் கூடியது. விஜய்க்கும் மக்கள் கூட்டம் கூடியது விஜய் அந்த கூட்டத்தை முறையாக ஒழுங்குப்படுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்.
விஜய் திமுக மற்றும் பாஜகவை எதிர்த்து வருகிறார் அவரை அக்கட்சியினர் விமர்சனம் செய்து தான் பேசுவார்கள்.
விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து குறுகிய காலத்திலேயே அதிக வாக்கு சதவீதம் பெற்றவர் அவருடன் வேறு யாரையும் ஒப்பிடவே கூடாது.அவ்வாறு ஒப்பிடுவது தவறான கண்ணோட்டம். விஜய் யாரை மனதில் வைத்து பேசுகிறார் என்பது தெரியவில்லை. விஜய் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் விஜய் தான் பதில் அளிக்க வேண்டும். விஜய் குறித்து அவரிடம் கேட்காமல் மற்றவர்களிடம் கேள்வி கேட்பது தவறு, இனிமேல் கூட்டணி குறித்தும் விஜய் குறித்தும் என்னிடம் எந்த கேள்வியும் கேட்க வேண்டாம் என ஏற்கனவே கூறியுள்ளேன்.
எல்லா கட்சியும் எங்களுடைய நண்பர்கள் தான். கூட்டணி குறித்து முடிவெடுக்க இன்னும் எங்களுக்கு நேரம் வேண்டும். விஜயகாந்த் இல்லாமல் நாங்கள் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் எங்களுடைய கட்சி வளர்ச்சியில் தான் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கண்டனம்
இதனிடையே, திருச்சி சிந்தாமணி அருகே உள்ள அண்ணா சிலைக்கு எதிரில் உள்ள டாஸ்மார்க் மதுபான பாரில் காலை முதலே மது விற்பனை அமோகமாக நடந்து வந்தது. அண்ணா பிறந்தநாள் விழா செய்தி சேகரிக்க வந்திருந்த பத்திரிகையாளர்கள் இதை கவனித்து டாஸ்மாக் மதுபான பார் உள்ளே சென்று அங்கு மது அருந்திக் கொண்டிருந்த மது பிரியர்கள் மற்றும் மது விற்பனை நடைபெறுவதை படம் பிடித்தனர். இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட கோட்டை காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து மதுபான பாரில் இருந்த 18 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து திருட்டுத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதன்பின் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இடம் செய்தியாளர்கள் மது விற்பனை குறித்து கேட்டபோது, "இது ஒரு தவறான முன்னுதாரணம், அண்ணாவின் பிறந்தநாள் அன்று அவரது சிலை அருகிலேயே மது விற்பனை நடந்தால் இதற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இது தவறான முன் உதாரணம். இப்பொழுது காலை 10.15 மணி தான் ஆகிறது அதற்குள் யார் இவர்களுக்கு டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு உத்தரவிட்டது. இதை அரசும் காவல் துறையினரும் நிச்சயம் கண்டித்து அது போன்ற நபர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற விஷயங்கள் தொடராது. இது கண்டிக்கத்தக்க விஷயம் , அண்ணா சிலைக்கு எதிரே இது போன்ற நிகழ்வு நடைபெறும் என்றால் இதைவிட வெட்கக்கேடு வேறொன்றும் கிடையாது" என்று கூறினார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.