குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தமிழகம் வருகை தர உள்ளார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்று காலை 10.15 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் சென்று ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்கிறார். அவரது வருகைக்காக, அங்குள்ள ரதவீதிகள் மற்றும் சங்குமால் கடற்கரை வரை புதிதாக சாலைகள் போடப்பட்டுள்ளன.
பின்னர், அங்கிருந்து மதியம் 1.25க்கு பேக்கரும்பில் உள்ள மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்துகிறார். அதன்பின், தனி விமானத்தில் சென்னை வரும் ஜனாதிபதி, மாலை கிண்டி, கவர்னர் மாளிகையில் தங்குகிறார். அதன்பின் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
நாளை காலையில் கவர்னர் மாளிகையில் முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் ராம்நாத் கோவிந்த், காலை, 10:25-க்கு தனி விமானத்தில் ஐதராபாத் செல்கிறார்.
குடியரசு தலைவரின் வருகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குடியரசு தலைவராக பதவியேற்ற பிறகு ராம்நாத் கோவிந்த் முதல்முறை தமிழகம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.