/tamil-ie/media/media_files/uploads/2018/08/2-12.jpg)
குடியரசு தலைவர்
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து அறிவதற்காக நாளை (5.8.18) சென்னை வருகிறார்.
சிறுநீர் பாதை தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சல், ரத்த அழுத்தம் குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி கடந்த 27-ம் தேதி நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறப்பு மருத்துவர்கள் குழு 24 மணி நேரமும் கண்காணித்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது.
குடியரசு தலைவர் வருகை:
தொடக்கத்தில் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு கருணாநிதியின் உடல்நிலை நன்றாக தேறி வருகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.அதனை தொடர்ந்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல்காந்தி உள்பட தேசிய, மாநில தலைவர்கள் நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் நலம் விசாரித்தனர்.
இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நேரில் விசாரிப்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வருகிறார்.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வரும் அவர், பிற்பகல் 2.40 மணிக்கு காவேரி மருத்துவமனைக்கு வருகிறார். தீவிர சிகிச்சைப் பிரிவில் கருணாநிதியை நேரில் பார்க்க இருக்கிறார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடமும், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினரிடமும் கேட்டறிகிறார். பின்னர், மாலை 3.40 மணி அளவில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.