அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பதிவு செய்யப்படாத கட்சி என்பதால், பொதுச் சின்னமாக குக்கரை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டார் அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். இரட்டை இலை சம்பந்தமான வழக்கு நிலுவையில் இருந்ததால், தீர்ப்பு வரும் வரை தேர்தல்களில் குக்கர் சின்னத்தை ஒதுக்க வழக்கும் தொடர்ந்தார்.
ஆனால் அதன் பின்னர் இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க-வுக்கு ஒதுக்கியது சரிதான் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் தினகரன். தங்களுக்கு இடைக்கால சின்னமாக குக்கரை வழங்க வேண்டும் எனவும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதனை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே பொதுச்சின்னம் வழங்கப்பட முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதனால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சி இதுவரை பதிவு செய்யப்படாததால், அதற்கு பொதுச் சின்னத்தை ஒதுக்க முடியாது என திட்டவட்டாமக தெரிவித்தது.
இதையடுத்து வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று காலை 10.30 மணிக்கு இவ்வழக்கை விசாரிக்கிறார்கள் நீதிபதிகள்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய, டி.டி.வி.தினகரன், ”ஒருவேளை எங்களுக்கு பொதுச்சின்னம் ஒதுக்கப்படாவிட்டால், அனைத்து அ.ம.மு.க வேட்பாளர்களும் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவார்கள்” என்றார்.
இன்று (மார்ச் 26) காலை 10.30 மணிக்கு குக்கர் சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது. விசாரணையின்போது, ‘குக்கர் சின்னத்தை உங்களுக்கு ஒதுக்கியது யார்?’ என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் கபில்சிபல், ‘டெல்லி ஐகோர்ட் உத்தரவுப்படி அந்த சின்னம் வழங்கப்பட்டது’ என பதில் கூறினார்.
‘ஒரு குறிப்பிட்ட சின்னத்தை ஒரு கட்சிக்கு வழங்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியுமா?’ என்றும் விசாரணையின்போது தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். குக்கர் இல்லாவிட்டால், வேறு பொதுச் சின்னம் தாருங்கள் என்றும் டிடிவி தரப்பில் விவாதம் செய்தனர். நீதிமன்றம் உத்தரவிட்டால், எங்கள் கட்சியை உடனடியாக பதிவு செய்யத் தயார் என்றும் டிடிவி தரப்பு வழக்கறிஞர் கபில்சிபல் கூறினார்.
அமமுக.வை இன்றே பதிவு செய்தாலும், குக்கர் அல்லது பொதுச் சின்னத்தை உடனே தர முடியாது என்று தேர்தல் ஆணையம் தரப்பில் வாதிடப்பட்டது. அரசியல் கட்சியை பதிவு செய்தாலும், பொதுச் சின்னம் வழங்க 30 நாட்கள் ஆகும் என தேர்தல் ஆணையம் வாதிட்டது. ‘டிடிவி தினகரனுக்கு குக்கர் இல்லாவிட்டாலும், வேறு ஏதாவது ஒரு பொதுச் சின்னம் வழங்கலாமே?’ என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதைத் தொடர்ந்து, தலைமை தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று டி.டி.வி தினகரனின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம். அதோடு அவருக்கு குக்கர் சின்னம் வழங்கவும் மறுப்பு தெரிவித்திருக்கிறது.
அதோடு அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் எல்லோரும் சுயேட்சை தான் என்றும், அமமுக-வுக்கு பொதுச்சின்னம் வழங்குவதைப் பற்றி தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.