தமிழ்நாட்டின் முதலமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இதை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், திரையுல பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் மற்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோரும் முதல்வருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:
“தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுதியுள்ள பிறந்தநாள் வாழ்த்துக் கடிதத்தில், “”தங்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கிடைத்திடவும், மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிடவும் வாழ்த்துகிறேன்”” என்று தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் எழுதியுள்ள பிறந்தநாள் வாழ்த்துக் கடிதத்தில், “”எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, நாட்டிற்கு சேவையாற்றிட மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கை கிடைத்திட வாழ்த்துகிறேன்”” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி எழுதியுள்ள பிறந்தநாள் வாழ்த்துக் கடிதத்தில், “”70-வது பிறந்தநாள் காணும் தாங்கள் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்”” என்று கூறியுள்ளார்”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.