/tamil-ie/media/media_files/uploads/2018/03/a741.jpg)
தமிழகத்தில் நடைபெறவுள்ள ராணுவ கண்காட்சியை துவக்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி ஏப்.,11ம் தேதி தமிழகம் வருகிறார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, உச்சநீதிமன்றம் விதித்த கெடு இன்னும் மூன்று நாட்களில் (மார்ச்.29) முடிவடைய உள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக 9 பேர் கொண்ட காவிரி மேற்பார்வை குழுவை அமைக்க முடிவு செய்தது. இதற்கு தமிழகத்தின் அனைத்து கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
முழு அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வலியுறுத்தி, தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் டெல்லி சென்றுள்ள 150 விவசாயிகள், இன்று காலை முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கை நிறைவேறும் வரை பிரதமர் வீடு முற்றுகை, பாராளுமன்றம் முற்றுகை, ஜனாதிபதி மாளிகை முற்றுகை என தினமும் நூதன போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். ஆனால், இந்த நிமிடம் வரை மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்போம் என்று மறந்தும் கூட சொல்லவில்லை.
இந்த நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் சார்பில் தமிழகத்தில் ஏப்., 11 முதல் 14 வரை நான்கு நாட்கள் ராணுவ கண்காட்சி நடைபெறுகிறது. கிழக்கு கடற்கரைசாலையிலுள்ள திருவிடந்தையில் நடைபெறும் இக்கண்காட்சியை பிரதமர் மோடி துவங்கி வைக்க ஏப்ரல் 11ம் தேதி தமிழகம் வருகிறார். இவ்விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம், பெண்கள் இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் ’அம்மா ஸ்கூட்டர் திட்டம்’ அறிமுக விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள தமிழகம் வந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.