/indian-express-tamil/media/media_files/JKDdQxTfttvESCVPfjbz.jpg)
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சியில் குடிநீர் பணியாளராக பணியாற்றி வந்தவர் அசோக்குமார் (32). இவரது மனைவி சுசீலா(30). இவர்களுக்கு 3 வயதில் சர்வந்த் என்ற குழந்தை உள்ளது.
இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் மாலை கேஸ் கம்பெனியில் உள்ள தங்களது வீட்டில் இருந்து மாலை 5 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் பெரியநாயக்கன்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். வித்யாலய மாற்றுத்திறனாளிகள் மையம் எதிரில் வந்தபோது பொள்ளாச்சியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து இவர்கள் மீது மோதியது. இதில் அசோக்குமாரும், குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதற்குள் தனியார் பேருந்தில் இருந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுசீலாவை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆத்திரமுற்ற பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.