திருப்பத்தூரில் தனியார் தொலைக்காட்சி ஊழியரை தாக்கிய பேருந்தை சாலை மறியலில் ஈடுபட்டு சிறைபிடித்த பத்திரிக்கையாளர்கள் அவர்களுக்கு ஆதரவாக ஊர் பொதுமக்கள்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சியில் (புதிய தலைமுறை) செய்தியாளராக பணிபுரிந்து வருபவர் நைனா முகமது. இவர் காரையூரில் அமைச்சர் பங்கேற்கும் கிராமசபை கூட்டத்திற்கு செய்தி சேகரிக்க இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்போது பின்னால் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து (NNS) ஓட்டுனரிடம் ஏன் இவ்வளவு வேகமாக நகரத்திற்குள் வருகிறீர்கள் என கேள்வி கேட்டுள்ளார்.
இதற்கு அந்த ஓட்டுநர், நாங்கள் அப்படித்தான் வருவோம் உன்னால் முடிந்ததை செய்து கொள் என தகராறு செய்த நிலை தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் அருகில் இருந்த சிலர் செய்தியாளரை கடுமையாக தாக்கினர். இதில் அதிர்ச்சி அடைந்த செய்தியாளர் அருகில் இருந்த திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் பேருந்து மதுரையை நோக்கி சென்று விட்ட காரணத்தினால் திரும்பி வரும்போது ஓட்டுனரையும், செய்தியாளரை தாக்கிய நபரையும் காவல் நிலையத்தில் ஒப்படைப்பதற்காக காத்திருந்த பத்திரிகையாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
மாற்று ஓட்டுநரை வைத்து பேருந்து இயக்கி வந்ததால் ஆத்திரமடைந்த பத்திரிகையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு பேருந்தை சிறை பிடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தற்சமயம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் பத்திரிகையாளர்கள் செய்தியாளரை தாக்கிய நபரையும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட நபரையும் ஒப்படைக்க வலியுறுத்தி தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.