தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 7.5% அரசு இடஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் எச்சரித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், விதி எண் 55ன் கீழ், “அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ இளநிலை படிப்பில் 7.5 % இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை, கட்டணங்கள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதில் பேசிய அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சி.விஜயபாஸ்கர், "ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து வளர்ந்ததன் காரணமாக, 7.5% உள் இடஒதுக்கீடு என்ற மகத்தான திட்டத்தை தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கொண்டுவந்ததார். குறிப்பாக இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையிலும், ஆளுநரின் கையொப்பம் இல்லாமலும் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்த 7.5% உள் இடஒதுக்கீட்டில் பல் மருத்துவம் பயின்று வரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்ற விதி இருந்தும், திருச்சி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கின்றனர். மேலும் 4 ஆண்டுகள் பல் மருத்துவ படிப்பை முடித்து இன்டேன் பயிற்சிக்காக செல்லும் பயிற்சி பல் மருத்துவர்களிடம் சில சுயநிதி கல்லூரிகள் 2 லட்சம் ரூபாய் முதல் இரண்டரை லட்சம் ரூபாய் வரையில் கட்டணம் கேட்டு நிர்பந்திக்கின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்தி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "2020 ஆண்டு 7.5% சிறப்பு ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வு நடைமுறைக்கு வந்துவிட்டதால் கிராமப்புற மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கோரிக்கை வலியுறுத்தியவர் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஒட்டுமொத்தமாக அவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் ஒப்புதல் தந்தார்கள். ஆனால் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்தார். ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டால் திமுக பெரிய போராட்டம் நடத்தும் என மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆளுநருக்கு கடிதத்தையும் அனுப்பினார். அதற்கு பின் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் மூலம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
மேலும், 7.5% இடஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படிப்பு செலவை திமுக ஏற்கும் என மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதை தொடர்ந்து அன்று பிற்பகலில் அனைத்து மாணவர்களின் கட்டணத்தையும் அரசே ஏற்கும் என அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆளுநருக்கு எதிரான போராட்டம், கடிதம் என அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்ட பின்னரும் ஆளுநர் அதற்கு செவி சாய்க்கவில்லை. இதனால், அதற்கு பின் அதிமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட அரசாணைக்கான மூலக்கரு மு.க ஸ்டாலின் தான்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், " இதன்படி கடந்த 5 ஆண்டுகளில் 435, 555, 584, 625, 625 மாணவர்கள் இந்த இடஒதுக்கீட்டால் பயன் பெற்றுள்ளனர். அரசு கல்லூரிகளை பொறுத்தவரையில் ரூ.1.49 லட்சமும், சுயநிதி கல்லூரிகளை பொறுத்தவரை 9 லட்சத்து 7000 ரூபாயை அரசு மூலம் இந்த இடஒதுக்கீட்டில் படிக்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது. இதில் சுயநிதிக் கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அதிமுக உறுப்பினர் ஆர்.பி உதயகுமார், "7.5% இடஒதுக்கீட்டிற்கான சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், அரசமைப்பு சட்டத்தை பயன்படுத்தி அரசாணை பிறப்பித்த இந்தியாவின் ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான்" என்றார்.