ஹட்சன் நிறுவனத்தின் ஆரோக்கியா பால் விலை மார்ச் 14-ம் தேதி முதல் மீண்டும் உயர்கிறது, இதனால், தனியார் நிறுவனத்தின் பால் விலை உயர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஹட்சன் நிறுவனத்தின் ஆரோக்கியா பால் மற்றும் தயிரின் விலையை மார்ச் 14 முதல் மீண்டும் உயர்த்தியுள்ளது. இதன் மூலம் நிறைகொழுப்பு பாலின் விலை லிட்டருக்கு ரூபாய் 82 ஆகவும் அரை லிட்டர் பால் 2 ரூபாய் அதிகரித்து 40 ஆகவும் உயர்ந்துள்ளது.
தனியார் நிறுவனத்தின் பால், தயிர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் பொன்னுசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
“பால் கொள்முதல் மற்றும் மூலப் பொருட்கள் விலை உயர்வு எனக்கூறி, ஒவ்வொரு முறையும் பால், தயிர் விற்பனை விலையை தனியார் நிறுவனங்கள் உயர்த்துகின்றன. கடந்த டிசம்பரில் பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ. 2, நடப்பாண்டு பிப்ரவரியில் லிட்டருக்கு ரூ. 2; தயிர் விற்பனை விலை கிலோவிற்கு ரூ. 5 வரை ஆந்திராவைச் சேர்ந்த முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் உயர்த்தின. ஹட்சன் நிறுவனம் வெள்ளிக்கிழமை (14.03.2025) முதல், ஆரோக்யா பாலுக்கான விற்பனை விலையை லிட்டருக்கு ரூ. 4, தயிருக்கு கிலோவுக்கு ரூ. 3 வரை உயர்த்துவதாக பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை வழங்கியுள்ளது.
இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் நிறைகொழுப்பு பாலின் விற்பனை விலை லிட்டர் ரூ. 80 வரை தொட்டிருக்கிறது.
ஒரு மாத இடைவெளியில் இரண்டாவது முறையாக பால், தயிர் விற்பனை விலையை உயர்த்தும் ஹட்சன் நிறுவனத்திற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
இந்த விற்பனை விலை உயர்வு அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். ஏனெனில் உணவகங்கள், தேனீர் கடைகள் மற்றும் தனியார் அலுவலக கேண்டீன்களில் தேனீர், காபி மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயரும். இதனால் மாதாந்திர ஊதியம் பெறும் பணியாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் என பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்.
ஹட்சன் நிறுவனத்தின் இந்த தன்னிச்சையான பால் விற்பனை விலை உயர்வானது பிற தனியார் பால் நிறுவனங்களின் பால் மற்றும் தயிர் விற்பனை விலை உயர்வுக்கும் வழி வகுக்கும்.
ஹட்சன் நிறுவனத்தின் தன்னிச்சையான விற்பனை விலை உயர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு அதனை தடுத்து நிறுத்துவதோடு, தனியார் பால் நிறுவனங்களின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை தமிழக அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். இதற்கு சிறப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தப்படுகிறது” என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி வலியுறுத்தியுள்ளார்.