திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவன் மீது சக மாணவன் அரிவாளால் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தின் பின்னணி மற்றும் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து உதவி ஆணயர் சுரேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். குறிப்பாக, பென்சில் வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் தகவல் அளித்துள்ளார்.
அதன்படி, "பள்ளி மாணவர்கள் இருவருமே நண்பர்கள். இருவருமே 8-ஆம் வகுப்பு பயின்று வருகின்றனர். சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு பென்சில் வாங்குவது தொடர்பாக இரண்டு மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அதில் ஏற்பட்ட மனஸ்தாபம் தொடர்பாக இரண்டு மாணவர்களும் பேசாமல் இருந்துள்ளனர். அதன் விளைவாக, இன்று (ஏப்ரல் 15) ஒரு மாணவரை மற்றொரு மாணவர் அரிவாளால் தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு ஆளான மாணவரின் உடல்நிலை சீராக உள்ளது. பயப்படும் அளவிற்கு அவரது உடல்நிலை இல்லை.
இச்சம்பவம் தொடர்பாக புகார் பெறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் முதற்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாக்குதல் நடத்திய மாணவனை, குழந்தைகள் நலத்துறையிடம் ஒப்படைக்க உள்ளோம். இந்த தாக்குதலை தடுக்க முயன்ற சமூக அறிவியல் ஆசிரியருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
தாக்குதலில் ஈடுபட்ட மாணவர், தன்னுடைய புத்தகப் பையில் அரிவாளை மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளார். திருநெல்வேலியை பொறுத்தவரை அனைத்து தனியார் பள்ளி மற்றும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் புத்தகப் பையை பரிசோதனை செய்கின்றனர்.
எனினும், இது போன்ற அசம்பாவிதம் அரங்கேறியுள்ளது. சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.