தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் - குடிநீர் வழங்கல் துறை செயலாளர் இடையேயான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் நடத்தி வந்த வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து லாரிகள் மூலம் பொது மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில், சென்னை புறநகர் பகுதிகளில் நிலத்தடி நீரை அனுமதியின்றி எடுப்பதாக கூறி தண்ணீர் லாரிகளை சிறைபிடித்து, உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மீது போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்வதாக லாரி உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து விவசாயக் கிணறுகளில் உரிமையாளர் அனுமதியுடன் தண்ணீர் எடுக்க உரிமம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இன்று காலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் சுமார் 4, 500 தண்ணீர் லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, லாரி உரிமையாளர்களுடன் நகராட்சி, குடிநீர் வழங்கல் துறை செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டிய நிலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தனியார் லாரிகள் நிலத்தடி நீர் எடுக்க முறையாக ஆய்வு செய்து 90 நாட்களில் தற்காலிக அரசாணை வெளியிடப்படும் என அதிகாரிகள் கூறியதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..