திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு 4.40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு 3.20 லிட்டர் சென்னைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இதில் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு 1.10 லிட்டர் பால் பாக்கெட் மூலம் ஏஜெண்டுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. இது தவிர ஐந்து முதல் 10 ஆயிரம் லிட்டர் பால் இருப்பு வைக்கப்படும்.
இந்நிலையில் தனியார் பால் விலை ஏற்றத்தால் ஆவின் பால் தேவை அதிகரித்துள்ளது.
பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை ஆவின் அதிகரிக்காத காரணத்தினால்,
மேலும் தனியார் பால் நிறுவனங்கள் சொசைட்டி மூலம் பெறக்கூடிய பால் கொள்முதலுக்கு விலை உயர்த்தி கொடுத்துள்ளதால் பால் உற்பத்தியாளர்கள் தனியார் பால் உற்பத்தியாளர்களிடம் பால் கொடுப்பதை ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆவின் பால் பண்ணையில் பால் பதப்படுத்தும் எந்திரம் தொழில்நுட்பக் கோளாறால் பால் பாக்கெட் விநியோகிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக காலை 4:00 மணி முதல் 5 மணிகளுக்குள் பால் பாக்கெட்டுகள் பால் முகவரிடம் கொடுக்கப்படும்.
ஆனால் கடந்த 3 மாதமாக திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு காலை 6 மணி முதல் ஏழு மணிக்குள் பால் பாக்கெட்டுகள் ஏஜெண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் பால்பாக்கெட் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பால் பாக்கெட்டுகள் விநியோகிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் குறைந்துள்ளதாக பால் முகவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை 7 மணி வரை ஆவின் நிர்வாகம் ஆவின் பால் பாக்கெட்டுகளை அனுப்பாததால் ஆத்திரமடைந்த ஆவின் முகவர்கள் 50க்கும் மேற்பட்டோர் திருச்சி கொட்டப்பட்டு ஆவின் பால் பண்ணை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆவின் பால் பண்ணை நிர்வாக அதிகாரிகள் பால் முகவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது பால் பண்ணையில் இருந்து வெளியே வந்த ஆவின் பால் வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆவின் பால் வாகன ஓட்டுனருக்கும், முகவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியாக மாறியது. உடனே அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
மேலும் இன்று காலை அனுப்பப்படும் பால் பாக்கெட்டுகள் வேண்டாம் என்றும், மாலை அனுப்பப்படும் பால்பாக்கெட் மட்டுமே பெற்றுக் கொள்வதாக முகவர்கள் ஒருசேர தெரிவித்தனர். இதனால் திருச்சி புதுக்கோட்டை சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil