அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்டோம்' என்ற தலைப்பில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவர் 29-ம் தேதி சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் வருகைக்கு முன்னதாகவே, சிவகங்கை மற்றும் காளையார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில், முக்குலத்தோர் கூட்டமைப்பின் சார்பில் அவருக்கு எதிராகக் கண்டனச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்தப் போஸ்டர்கள் சிவகங்கை மாவட்ட அதிமுகவினர் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்தச் சுவரொட்டிகளில் பின்வரும் வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன:
"விழுப்புரத்தில் நடைபெற்ற ரோடு ஷோவில் மக்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, 'நான் ஆட்சிக்கு வந்தவுடன் 10.5% இடஒதுக்கீட்டை வன்னியர்களுக்கு மீண்டும் வழங்குவேன்' என்கிறார். இது தேவர் சமுதாயத்தை அழிக்க எடப்பாடி அணி திட்டமிடப்பட்ட சதியாகும். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு எதிராக வாக்களிப்போம். தேவர் இனமே சிந்திப்பீர்!"
இந்தக் கண்டனச் சுவரொட்டிகள், எடப்பாடி பழனிசாமியின் வருகைக்கு முன்னதாகவே மாவட்டத்தில் ஒருவிதப் பரபரப்பையும், அ.தி.மு.க-வினரிடையே குழப்பத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளன. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும்போது, சமூகரீதியான இந்த விவகாரம் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.