/indian-express-tamil/media/media_files/2025/08/14/sanitary-workers-protest-2025-08-14-12-13-53.jpg)
அமைச்சர் சேகர்பாபு கிளம்பிய அடுத்த நிமிடத்தில் தொடங்கிய கைது: நள்ளிரவில் ரிப்பன் மாளிகையில் நடந்தது என்ன?
சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகள் மொத்தம் 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில், 2020ம் ஆண்டில் 10 மண்டலங்களின் தூய்மைப் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள 5 மண்டலங்களில் ராயப்பேட்டை மற்றும் திரு.வி.க. நகர் ஆகியவற்றை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தே தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்திவந்தனர்.
ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் சென்னை மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகை முன்பு இரவு, பகலாக போராடி வந்தனர். இரு மண்டலங்களை சேர்ந்த சுமார் 2,000 தூய்மைப் பணியாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இப்போராட்டத்திற்கு அ.தி.மு.க., த.வெ.க., பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூ., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், திரைப்பிரபலங்களும் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்தி தூய்மைப் பணியாளர்களை நேற்றிரவு (ஆக.13) காவல்துறையினர் கைது செய்து தென் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச்சென்றனர். கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் கீழ்கட்டளை, நந்தம்பாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம், சைதாப்பேட்டை, மடுவாங்கரை, பரங்கிமலை என 10 வெவ்வேறு பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்களில் அடைக்கப்பட்டனர்.
நள்ளிரவில் ரிப்பன் மாளிகை முன்பு என்ன நடந்தது?
இரவு 10 மணியளில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, மாநகராட்சி கமிஷ்னர் உள்ளிட்ட அதிகாரிகள் ரிப்பன் மாளிகைக்கு வந்து காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, ஆலோசனை முடித்துவிட்டு அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா செய்தியாளர்களை சந்திப்பதாக இருந்ததால், அங்கிருந்த செய்தியாளர்கள் ரிப்பன் மாளிகை வாயிலில் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். ஆலோசனை முடித்து வெளியே வந்த சேகர்பாபுவிடம் அங்கிருந்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றார் சேகர்பாபு. இந்த சம்பவம் இரவு 11.40 மணிக்கு நடக்கிறது.
5 நிமிடத்தில் இரவு 11:45 மணியளவில், 1,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் 30-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வரவழைக்கப்பட்டு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யத் தொடங்கினர். அரை மணி நேரத்திற்குள் கைது நடவடிக்கை முடிந்தது. போராடிக் கொண்டிருந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். அவர்களை கண்ணீரும் கம்பளையுமாக வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்திருந்தனர். பெண்களின் உணர்ச்சிபூர்வமான அழுகைச் சத்தங்களும், நாங்க என்ன தீவிரவாதிகளா? எங்களது வாழ்வாதாரத்திற்கு கூட போராட விட மாட்டீர்களா? என்று அவர்களின் கேள்விகளும் வீடியோவில் பதிவாகி உள்ளன.
இந்த நடவடிக்கையின்போது சில பெண் பணியாளர்கள் மயக்கமடைந்ததாகவும், அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரவு நேரத்தில் பெண்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும், அவர்களின் கைகள் உடைக்கப்பட்டதாகவும், ஆடைகள் கிழிக்கப்பட்டதாகவும் நீலம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் தரப்பு வழக்கறிஞர் பாரதி கூறினார். பெண் போராளிகளை ஆண் காவல்துறையினர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், இது தமிழ்நாடு அரசின் காவல்துறையினரால் மோசன செயல் என்றும் பாரதி கூறினார்.
முன்னதாக, தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது சென்னை மாநகராட்சி, லேபர் யூனியன், ராம்கி நிறுவனம் என 3 தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும் வரும் 31ஆம் தேதி வரை பணியில் வந்து சேரும் தூய்மைப் பணியாளர்களுக்கு கட்டாயப் பணி வழங்கப்படும் என நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது ராம்கி நிறுவனம். தூய்மைப் பணியாளர்கள் அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதால் அவர்களை அந்தப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்த காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.