மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உரிய உள் ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க வேண்டும். நாளை நடைபெறவிருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான நல்ல முடிவை முதலமைச்சர் எடுத்து, போர்க்கால அடிப்படையில் உரிய வழிவகை செய்திட வேண்டும் என புதுச்சேரி அ.தி.முக வேண்டுகோள் வைத்துள்ளது.
புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;
இதையும் படியுங்கள்: புதுச்சேரி அரசு யூ.டி.சி தேர்வு; 136 இடங்களுக்கு 46000 பேர் போட்டி
மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உரிய உள் ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க வேண்டும். நாளை நடைபெறவிருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான நல்ல முடிவை முதலமைச்சர் எடுத்து, போர்க்கால அடிப்படையில் உரிய வழிவகை செய்திட வேண்டும்.
புதுச்சேரி நகரப் பகுதி முழுவதும் மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் அவர்களை பரிசோதனை செய்து காவலர்கள் அபராதம் விதிக்கின்றனர். புதுச்சேரி நகர பகுதி முழுவதும் கஞ்சா, பிரவுன் சுகர் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் தங்கு தடை இன்றி விற்பனை செய்யும் கேந்திரமாக மாறி உள்ளது. புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மதுபானம் தவிர்த்து பல்வேறு பொருட்கள் உபயோகப் படுத்துபவர்களால் வாகன விபத்துக்கள் அதிகம் நடைபெறுகிறது. அவற்றை கண்காணிக்க தனி கண்காணிப்பு பிரிவை டி.ஜி.பி ஏற்படுத்தி போதைப்பொருட்கள் விற்பனையை தடுத்திட வேண்டும்.
அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கும்போது சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மற்றும் எந்த இடத்தில் விழா நடக்கிறதோ அந்த பகுதியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அந்த விழாவில் இருப்பது வழக்கம். தற்போது அனைத்து நலத்திட்ட உதவிகள், பொருட்கள் ஆகியவற்றை அதிகாரிகள் வழங்காமல் சட்டமன்ற உறுப்பினர்கள் அவற்றை மொத்தமாக பெற்றுக்கொண்டு தங்கள் வீட்டு பொருட்கள் போன்று பயளாளிகளுக்கு வழங்குகின்றனர். சிலர் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் படங்களை போட்டும், வேறு சிலர் தங்கள் கட்சி அலுவலகத்திற்கு பொதுமக்களை வரவழைத்தும் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்கள்.
சில சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு பணிகள் நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று ஒப்பந்ததாரர்களை மிரட்டி காரியத்தை சாதிக்கிறார்கள். செய்யும் பணியில் தவறு இருந்தால் துறை அதிகாரிகளிடம் சட்டமன்ற உறுப்பினர்கள் புகார் செய்யலாம். அதை விடுத்து ஒப்பந்தக்காரர்களை மிரட்டுவது சரியான செயல் அல்ல. புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தலை நீதிமன்றத்தின் மூலம் தடுத்து நிறுத்திய தி.மு.க, தற்போது பஸ் நிலைய விரிவாக்க பணியை, வியாபாரிகளை தூண்டிவிட்டு நீதிமன்றத்தின் மூலம் தடுத்து நிறுத்தி உள்ளது. அரசு இதில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணிப்பூர் கலவரத்தை உறுதியாக எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடியார் கண்டித்துள்ள நிலையில் தி.மு.க.,வின் தமிழக நிதி அமைச்சர் எங்கள் பொதுச் செயலாளரை பற்றி தவறாக பேசியுள்ளார். அ.தி.மு.க பற்றியோ, எங்கள் பொது செயலாளர் பற்றியோ குறைபேசும் தகுதி தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கே இல்லாத நிலையில் நேற்று முளைத்த காளான் போல நிதியமைச்சர் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கதாகும். தமிழக தி.மு.க அமைச்சர்களில் ஊழல் மீது தமிழக தி.மு.க அமைச்சரவையில் ஊழல் மீது நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அதை திசை திருப்ப மணிப்பூர் கலவரத்தை தமிழகத்தில் தி.மு.க தூண்டிவிடுகிறது. பிரதமர் மோடியை கலங்கப்படுத்துவதாக வகுப்புவாத சண்டைகள், கலவரங்கள், பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், வன்கொடுமை நிகழ்வுகள், மனித உரிமை மீறல்கள் பற்றி வாய் திறக்காத எதிர்க்கட்சிகள் இன்று மணிப்பூர் பிரச்சனைக்காக நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.
பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் வீட்டு நிகழ்விற்கு பட்டாசு வெடித்ததற்காக அந்த நபரை தனது காலில் விழ வைத்து தி.மு.க நிர்வாகியின் வன்கொடுமை பற்றி ஏன் தமிழகத்தில் யாரும் வாய் திறக்கவில்லை. விஷ சாராயம் அருந்தி 23 அப்பாவிகள் மரணமடைந்தனர். அவர்களுக்காக ஏன் ஆளும் தி.மு.க அரசையும், முதலமைச்சரையும் கண்டிக்க முன்வரவில்லை. லாக்கப் மரணங்கள் தமிழகத்தில் தொடர்வது சம்பந்தமாக ஏன் யாரும் வாய் திறக்கவில்லை. நீட் தேர்வு தற்கொலைக்கும், தங்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் முகத்தை திருப்பிக் கொள்ளும் காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுக்கு பிற மாநில நிகழ்வுகளைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது.
எங்கு அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றார்களோ அங்கு பாதிக்கப்படும் மக்களுக்காக அ.தி.மு.க துணைநிற்கும். எங்களைப் பற்றி பேசும் தகுதியும், அருகதையும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும், தி.மு.க.,விற்கும் இல்லை. இவ்வாறு அன்பழகன் கூறினார்.
இந்தப் பேட்டியின் போது மாநில கழக அவைத்தலைவர் அன்பானந்தம், மாநில இணைச்செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான கணேசன், மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், புதுச்சேரி நகர செயலாளர் அன்பழகன் உடையார் ஆகியோர் உடன் இருந்தனர்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil