புதுச்சேரி அரசின் சட்டப்பூர்வ பரிமாற்ற நாளையொட்டி கீழுர் நினைவிடத்தில் சட்டப்பேரவை தலைவர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.
Advertisment
பிரான்ஸ் நாட்டு ஆட்சியின் கீழ் இருந்து வந்த புதுச்சேரி, இந்தியாவுடன் இணைவது தொடர்பாக புதுவை மாநில மக்கள் பிரதிநிதிகள் 178 பேரிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 1954-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந் தேதி இதற்கான வாக்கெடுப்பு வில்லியனூர் அருகே உள்ள கீழூரில் நடைபெற்றது.
இந்த வாக்கெடுப்பில் இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவாக 170 பேரும், எதிராக 8 பேரும் வாக்களித்தனர். அதைத்தொடர்ந்து பல்வேறு சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு பிரான்ஸ் நாட்டு பாராளுமன்றத்தில் 1962-ம் ஆண்டு ஆகஸ்டு 16-ந் தேதி புதுவை இந்தியாவுடன் இணைய ஒப்புதல் அளித்து சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
புதுச்சேரி அரசு இந்தியா அரசுடன் இணைக்கப்பட்ட ஆகஸ்டு 16-ந் தேதி புதுச்சேரி அரசின் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழாவாக ஆண்டு தோறும் கீழுர் நினைவிடத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று கீழூர் நினைவிடத்தில் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் சட்டப்பேரவை தலைவர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தேசிய கொடியேற்றி காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். மேலும் தியாகிகள் தூண்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
விழாவில் தலைமை செயலர் ராஜூவர்மா, மாவட்ட ஆட்சியர் வல்லவன், காவல்துறை அதிகாரிகள் உட்பட கலந்து கொண்டனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”