ராகுல் காந்தியின் நடைபயணம் இந்திய மக்களை ஒருங்கிணைத்து 2024ல் மிகப்பெரிய மாற்றம் வரும் என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நாராயணசாமி சாமி தரிசனம் செய்தார். மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்த நாராயணசாமிக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையும் படியுங்கள்: கக்கன் மகனின் முழு மருத்துவ செலவை ஏற்ற தமிழக அரசு; தனி குழு அமைக்கப்பட்டு சிகிச்சை
தொடர்ந்து நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ராகுல்காந்தியின் பாத யாத்திரை எழுச்சியான பாத யாத்திரை.
மத்திய பா.ஜ.க அரசு மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால் மதக் கலவரம் உருவாக்கி அரசியல் லாபம் பெற நினைக்கிறது.
மோடி ஆட்சியில் 23 கோடி பேர் வறுமை கோட்டிற்கு கீழ் சென்றுவிட்டனர். பணக்காரர்களுக்காக மோடி ஆட்சி செய்கிறார். ஏழை, எளிய மக்கள் துன்பப்பட்டு வருகின்றனர்.
மோடி கொடுத்த வாக்குறுதி படி 16 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்காமல், வெறும் 16 லட்சம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் திவாலாகும் நிலை உள்ளது. இந்திய நாட்டின் அந்நியச் செலவாணி குறைந்து டாலர் மதிப்பு உயர்ந்து விட்டது.
சீனா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளோடு நல்ல உறவில்லாத நிலையை மோடி அரசு உருவாக்கி உள்ளது.
2024 தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் வரும். பா.ஜ.க அரசு எந்த மாநிலங்களிலும் நேர்மையாக ஆட்சிக்கு வருவதில்லை.
மணிப்பூர், மேகலாயா, கர்நாடகா, புதுச்சேரியில் கூட சட்டமன்ற உறுப்பினர்களை விலை வாங்கி ஆட்சியை கவிழ்ப்பது, பல ஆயிரம் கோடிகளை கொடுத்து ஆட்சியை கலைப்பது உள்ளிட்ட ஜனநாயக விரோத நடவடிக்கைகளை, ஜனநாயக படுகொலையை பா.ஜ.க செய்கிறது. ஒட்டுமொத்தமாக மக்கள் விரோத நடவடிக்கையில் பா.ஜ.க ஈடுபடுகிறது.
எதிர்க்கட்சி தலைவர்கள் மீது திட்டமிட்டு குறிவைத்து வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ உள்ளிட்ட அமைப்புகளை ஏவி சோதனை நடத்துகின்றனர். அதே எதிர்க்கட்சி தலைவர்கள் பா.ஜ.க.,வில் சேர்ந்தால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
அண்ணாமலை முழுநேர அரசியல்வாதி கிடையாது. தி.மு.க காங்கிரசை சாடுவதை தவிர அண்ணாமலைக்கு வேறு வேலை கிடையாது. வடமாநிலங்களை வேண்டுமானால் மோடியும், அண்ணாமலையும் ஏமாற்றலாம். ஆனால் தென்மாநிலங்களை, மக்களை பா.ஜ.க.,வால் ஏமாற்ற முடியாது.
நாடு என்ன வளர்ச்சிப்பாதையில் நாடு சென்றுள்ளது. ஏற்கனவே இருந்த திட்டங்களை தான் மோடி மாற்றியமைத்துள்ளார். இந்திய நாட்டிற்கு அனைத்தையும் செய்தது காங்கிரஸ் கட்சி தான்.
ராகுல்காந்தியின் பாத யாத்திரை இந்திய மக்களை ஒன்றிணைத்து மிகப்பெரிய மாற்றத்தை தரும். ராகுல் தலைமை பொறுப்பை ஏற்க மாட்டேன் என சொல்லவில்லை. தேர்தல் வரும் வரை பொறுமையாக இருப்போம்.
ராகுல் காந்தி தலைமை பொறுப்பை ஏற்க தகுதியானவரா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியது மக்களும், காங்கிரஸ் கட்சியினரும் தான். சீமான் இல்லை. சீமான் எங்கள் கட்சியில் வேண்டுமானால் சேர்ந்துவிட்டு பேசட்டும்.
மோடி இத்தாலி, அமெரிக்காவில் லண்டனில் இருந்து வரும் உடைகளை போடுகிறார். எங்களை விமர்சனம் செய்ய என்ன தகுதி யோக்கிதை பா.ஜ.க.,வுக்கு உள்ளது. இவ்வாறு நாராயணசாமி பேசினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil