புதுச்சேரியிலும் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி என புதுச்சேரி சுற்றுசூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு குழுமம் அறிவித்து உள்ளது.
நாடு முழுவதும் நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. சுற்று சூழலை பாதிக்காத வகையில் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி புதுச்சேரி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுசூழல் துறை, புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணிமுதல் 8 மணி வரை, என இரண்டு மணி வரை மட்டுமே பசுமை பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுற்று சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அனுமதி உண்டு. அமைதி பகுதிகளாக அறிவிக்கப்பட்ட மருத்துவமனைகள், வழிப்பாட்டு தளங்கள், கல்வி கூடங்கள் மற்றும் நீதிமன்ற வளாகத்தின் சுற்றுவட்டாரங்களில் 100 மீட்டருக்குள் பட்டாசு வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சரவெடி பட்டாசு பயன்பாடு மற்றும் உற்பத்திக்கு தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“