Advertisment

புதுக்கோட்டை பட்டாசு குடோன் தீ விபத்து; ஒருவர் மரணம் – ஒருவர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பட்டாசு குடோனில் தீ விபத்து; ஒருவர் உயிரிழப்பு - ஒருவர் காயம்; 4 விபத்துகளில் இதுவரை 11 பேர் பலி

author-image
WebDesk
New Update
Pudukkottai fire

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பட்டாசு குடோனில் தீ விபத்து

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அத்திப்பள்ளம் என்ற கிராமத்தில் வேல்முருகன் என்பவர் சொந்தமாக அனுமதி வாங்கி பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். அந்த பட்டாசு ஆலையின் பின்புறம் பட்டாசு குடோன் உள்ளது.

இந்த குடோனை விரிவாக்கம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தகர சீட் போடுவதற்காக வெல்டிங் வைத்த போது அதிலிருந்து பரவிய தீப்பொறி அந்த பட்டாசு குடோனில்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் குடோனுக்கு உள்ளே இருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதற தொடங்கியது. அப்போது கடையின் உரிமையாளர் வேல்முருகனின் தம்பி கார்த்திக் மற்றும் தொழிலாளிகள் சிலர் உள்ளே இருந்தனர். பட்டாசுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறியதால், கடை உள்ளே சிக்கிய கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு தொழிலாளி திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இது குறித்து அறிந்த விராலிமலை தீயணைப்புத் துறையினர் தீயை முழுமையாக கட்டுப்படுத்தினர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த விராலிமலை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பட்டாசு ஆலை உரிய அனுமதி பெற்று வந்தது தெரியவந்தது. சிவகாசியில் இருந்து கொண்டுவரப்படும் பட்டாசுகள் தீபாவளி மற்றும் பண்டிகை காலங்களில் விற்பனை செய்வதற்காக நிரந்தர பட்டாசு கடை அமைக்கப்பட்டுள்ளது. பட்டாசு குடோன் விதிமுறைகளின் படி செயல்படுவதாக காவல்துறையினரும், அதிகாரிகளும் தெரிவித்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஏற்கனவே கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர், சேலம் மாவட்டம் ஆத்தூரில் பட்டாசுத் தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயம் அடைந்தனர். அதேபோல் கடந்த 9ஆம் தேதி சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 6 பெண்கள் உட்பட மொத்தம் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேபோல் மே 9ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். 

இந்த மே மாதத்தில் மட்டும் இதுவரை நான்கு பட்டாசு ஆலை விபத்துகள் நடைபெற்றுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள மே மாதத்தில் இதுவரை நான்கு விபத்துகள் ஏற்பட்டு அதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவங்கள் பட்டாசு குடோனில் மற்றும் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் வேலை செய்பவர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Pudukottai Fire Accident
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment