13 வயது சிறுவனை கண்ணாடி விரியன் பாம்பு கொத்திய நிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவர்கள் அச்சிறுவனின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த நந்தகுமார் என்ற 13 வயது சிறுவன் வயல்வெளி அருகே சென்ற போது பாம்பு கொத்தியது. இதைத் தொடர்ந்து, உடனடியாக மீட்கப்பட்ட சிறுவன் அன்னவாசல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அங்கு முதலுதவி அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிறுவனை அனுப்பி வைத்தனர்.
அதன்பேரில், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுவனை 18 நாள்கள் போராடி அரசு மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். சிறுவனை காப்பாற்றியது குறித்து அரசு மருத்துவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, "நந்தகுமார் என்ற 13 வயது சிறுவனை பாம்பு கடித்தது. அச்சிறுவனுக்கு அன்னவாசல் மருத்துவமனையில் முதலுதவி அளித்து, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பாம்பு கடித்ததில் சிறுவனுக்கு வீக்கமும், வயிறு வலியும் அதிகரித்தது. 20 நிமிடங்களில் உறைய வேண்டிய இரத்தமும் உறையவில்லை.
மருத்துவமனையில் சிறுவனுக்கு உடனடியாக உரிய மருந்துகள் அளிக்கப்பட்டது. அதன்பின்னர், சிறுவனுக்கு வயிறு வலி சற்று குறையக் தொடங்கியது. ஆனால், மூன்றாவது நாளில் சிறுவனின் சிறுநீரக செயல்பாடுகள் குறையத் தொடங்கியது. 5 நாள்கள் சிறுவன் சிறுநீர் கழிக்கவில்லை. மேலும், சிறுநாளங்களில் அடைப்பு ஏற்பட தொடங்கியது. இதன் மூலம் கண்ணாடி விரியன் கடித்திருக்கலாம் எனத் தெரிய வந்தது.
இதனால், சிறுவனுக்கு 5 கட்டமாக டையலிஸிஸ் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சிறுவன் உடலில் மாற்றங்கள் ஏற்பட தொடங்கியது. சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஹீமோகுளோபின் 13.5 இருந்தது. அது 3-ஆக குறைந்து விட்டது. சிறுவனை தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ச்சியாக கண்காணித்தோம்.
18 நாள்கள் கழித்து சிறுவன் சீரான நிலையை எட்டியதும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்தோம்.
இன்று பரிசோதனைக்காக சிறுவன் மீண்டும் அழைத்து வரப்பாட்டான். சிறுவனின் உடல்நிலை தற்போது நன்றாக இருக்கிறது. சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் அது குறித்து தொடர் பரிசோதனை செய்ய அறிவுறுத்தியுள்ளோம். சிறுவன் தற்போது பள்ளிக்கு செல்லும் அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கிறான்.
சிறுவனுக்கு முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சையளிக்கப்பட்டது. தனியார் மருத்துவமனையில் இதற்கான சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் பணம் செலவாகும். ஆனால், அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் இருந்ததால் சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டது. பாம்பு கடித்தால் உடனடியாக சுமார் 5 நிமிடங்களுக்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளிக்க வேண்டும். சிறுவனை உடனடியாக அழைத்து வந்ததால் காப்பாற்ற முடிந்தது" எனக் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“