தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், திருச்சி சூரியூர் ஆகிய இடங்களில் நடைபெறும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி உலகப்புகழ் பெற்றதாகும். வாடிவாசலில் இருந்து சீறிப் பாயும் காளைகளை திமில் பிடித்து அடக்கும் காளையர்களை பார்ப்பதற்கே ஆண்டுதோறும் தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில், நாடுகளில் இருந்தும் பெரும்பாலானோர் தமிழகத்திற்கு வருகின்றனர்.
வீரமிகுந்த ஜல்லிக்கட்டு நடக்கும் மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டம் தான் அதிகப்படியான ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டமாகவும், அதிகப்படியான வாடிவாசல் கொண்ட மாவட்டமாகவும், அதிகப்படியான காளைகளை வளர்க்கும் மாவட்டமாகவும் மாடுபிடி வீரர்கள் அதிகம் உள்ள மாவட்டமாகவும் மாவட்டம் திகழ்ந்து வருகிறது.
ஆண்டுதோறும், முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி பகுதியில் நடைபெறுவது வழக்கம். அதேபோல், இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் தொடங்கியது. பொதுவாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் 31 -ஆம் தேதி வரை 120 -க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிகள், 30 -க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டுப் போட்டிகள், 50 -க்கும் மேற்பட்ட வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, போட்டியில், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750 -க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன. 300 மாடுபிடி வீரர்களும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், நடப்பாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதலில் மாடுபிடி வீரர்கள் அனைவரும் உறுதிமொழியை எடுத்துக் கொண்ட பிறகு போட்டி தொடங்கியது. சீறிப்பாய்ந்து வரும் காளைகளை மாடு பிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கி வருகின்றனர். ஒவ்வொரு சுற்றுக்கும் 50 வீரர்கள் வீதம் மாடுபிடி வீரர்கள் களமிறங்கி வருகின்றனர்.
முதலாவதாக தச்சங்குறிச்சி விண்ணேற்பு அன்னை ஆலய பங்குத்தந்தை சிறப்பு பிரார்த்தனை செய்ய, கோவில் காளை மேல தாளங்கள் முழங்க அழைத்து வரப்பட்டு வாடிவாசலிலிருந்து முதலாவதாக அவிழ்த்து விடப்பட்டு, அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு காளையாக களம் கண்டது. இதில் வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையர்களுக்கும் இருசக்கர வாகனம், கட்டில், பீரோ, பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசும், ஜல்லிக்கட்டு போட்டி நிர்வாகமும் முன்னெடுத்துள்ளது. பாதுகாப்பு பணியில் காவல்துறையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியில், காளையினால் காயம் ஏதும் ஏற்பட நேர்ந்தால், உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க, மருத்துவ குழுவினரும், மீட்பு படையினரும்,108 வாகனங்களும் குவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் வாடிவாசல் திறந்து வெளிவந்த காளைகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் சிசு என்பவருக்கு சொந்தமான ஒரு காளை உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருக்கிறது. அதனை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
புதுக்கோட்டை: தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு - ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட காளைகள்!#Pudukkottai | #Jallikattu pic.twitter.com/tqZYaTusKm
— Indian Express Tamil (@IeTamil) January 4, 2025
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.