விஜய்யின் பேச்சுக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நேற்று (அக்.27) நடைபெற்றது. இதில் தலைவர் விஜய் கட்சியின் கொள்கைகளை அறிமுகம் செய்து வைத்து பேசினார். முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
குறிப்பாக 2026-ல் தங்களை நம்பி கூட்டணிக்கு வரும் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும் என அறிவித்தார். இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியும் விஜய்க்கு பாராட்டு தெரிவித்து வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ வலுவான கொள்கை; கோட்பாடுகள்; அவற்றை அடைவதற்கான போராட்டங்கள்; முன் அனுபவங்கள் ஏதுமின்றி திரையுலகம், விளையாட்டு எனப் பிற துறைகளில் பெறக்கூடிய புகழ், விளம்பரம் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு அண்மைக் காலமாக பலரும் அரசியலுக்குள் நுழைகிறார்கள்.
தமிழகத்தை பொறுத்தமட்டிலும் திரை உலக புகழே பலரையும் ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்துள்ளது. கொள்கை கோட்பாடுகளை முழங்கி ஆட்சிக்கு வந்தவர்கள் நடைமுறையில் பெரும் தோல்வியுற்று விட்டனர். மேலும், அவர்களே தமிழ்ச் சமூகத்தின் பிரதான எதிரிகளாக பரிணமித்துவிட்ட நிலையில் விரும்பியும் விரும்பாமலும் புதிய சூழல்களை ஏற்றுக் கொள்ளும் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.
அண்மையில் துவங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டை தம்பி விஜய் இன்று வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். அவருக்குப் பாராட்டுக்கள். தமிழ்நாட்டில் கடந்த 75 வருடத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு எனும் கூட்டணி ஆட்சி குறித்து வெளிப்படையாக பேசவும் இல்லை; அதற்கான பல சூழல்கள் ஏற்பட்ட பொழுதும் ஆட்சியில் எந்த கட்சிக்கும் பங்கு அளிக்கவுமில்லை. ஆனால், தம்பி விஜய் அவர்கள் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி முழக்கத்தை முன் வைத்துள்ளார்.
புதிய தமிழகம் கட்சி துவங்கப்பெற்ற நாள் முதல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மட்டும் சொல்லாமல், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு அளிக்கும் கூட்டணி ஆட்சி முறையே தமிழகத்தில் நிலவும் அனைத்து அவலங்களுக்கும் தீர்வு என்பதை வலியுறுத்தி வருகிறது.
2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியே அளவு மாற்றத்தையும், குண மாற்றத்தையும் நிகழ்த்தும். அதுவே தமிழக மக்களுக்கு புதிய விடியலை உருவாக்கும்" என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“