சென்னை விமான நிலையத்தின் பலநிலை கார் பார்க்கிங்குடன் (MLCP) இணைந்த வணிக வளாகமான ஏரோஹப்பில் செயல்பட்டு வரும் ஐந்து திரைகள் கொண்ட பி.வி.ஆர் ஐனாக்ஸ் மல்டிபிளக்ஸ், மூடப்படும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையம் (ஏ.ஏ.ஐ), "சினிமா அரங்கு நடத்துவது 1994-ம் ஆண்டின் ஏ.ஏ.ஐ சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட செயல்பாடு அல்ல" என்ற நிலைப்பாட்டை எடுத்ததே இந்த சிக்கலுக்குக் காரணம்.
எனினும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், மே 29, 2025-ல் பி.வி.ஆர் ஐனாக்ஸ் அளித்த ஒரு கோரிக்கையை (தொடர்ந்து செயல்பட அனுமதி கோரி) ஏ.ஏ.ஐ பரிசீலித்து, சட்டப்படி முடிவெடுக்கும் வரை தற்போதைய நிலையை பராமரிக்க ஏ.ஏ.ஐ-க்கு உத்தரவிட்டுள்ளார். ஏ.ஏ.ஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், எம்.எல்.சி.பி (MLCP) மேம்பாட்டு ஒப்பந்தத்தின் பிரிவுகள் 41 மற்றும் 42 இன் படி ஏ.ஏ.ஐ ஒரு முடிவை எடுத்து, மல்டிபிளக்ஸ் நிறுவனத்திற்கு தெரிவிக்கும் என்று கூறினார். இதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மல்டிபிளக்ஸ் செயல்படுவதற்கு ஏ.ஏ.ஐ இடையூறு விளைவிப்பதைத் தடுக்கக் கோரி பி.வி.ஆர் ஐனாக்ஸ் தாக்கல் செய்த ரிட் மனுவை முடித்துவைத்து இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ராமன், சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த வணிக உள்கட்டமைப்புடன் எம்.எல்.சி.பி-யை மேம்படுத்துவதற்காக ஏ.ஏ.ஐ 2017-ல் டெண்டர்களைக் கோரியது என்றார். ஒலிம்பியா டெக்பார்க் (சென்னை) பிரைவேட் லிமிடெட் வெற்றிகரமான ஏலதாரராகத் தேர்வாகி, மீனாம்பாக்கம் ரியாலிட்டி பிரைவேட் லிமிடெட் என்ற ஒரு சிறப்பு நோக்க வாகனத்தை உருவாக்கியது. இந்த நிறுவனம், 15 வருட காலத்திற்கு வசதியை மேம்படுத்தவும், கட்டவும், இயக்கவும், பராமரிக்கவும் 2018-ல் ஏ.ஏ.ஐ உடன் ஒரு மேம்பாட்டு ஒப்பந்தத்தில் நுழைந்தது.
ஏ.ஏ.ஐ 2018 டிசம்பரில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் இருந்து சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்றது. இந்த விண்ணப்பத்தில் மல்டிபிளக்ஸ் பகுதிக்கான குறிப்பு வெளிப்படையாக இருந்தது. மேலும், 2019 மற்றும் 2021-ல் கட்டுமானத் திட்டங்களுக்கு ஏ.ஏ.ஐ ஒப்புதல் அளித்தது என்றும், 2021 இல், சென்னை மாநகர காவல் ஆணையரிடம் இருந்து மல்டிபிளக்ஸ்-களுக்கான தடையில்லா சான்றிதழை ஏ.ஏ.ஐ கோரியது என்றும் ராமன் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆவணங்களின் அடிப்படையில் தான், பி.வி.ஆர் ஐனாக்ஸ் நவம்பர் 2022 இல் மீனாம்பாக்கம் ரியாலிட்டீயுடன் மல்டிபிளக்ஸ் செயல்படுத்துவதற்கான துணை-உரிம ஒப்பந்தத்தில் நுழைந்து, பிப்ரவரி 1, 2023 முதல் திரைப்படங்களைத் திரையிடத் தொடங்கியது.
இருப்பினும், ஜூலை 21, 2023-ம் தேதி, ஏ.ஏ.ஐ மீனாம்பாக்கம் ரியாலிட்டிக்கு ஒரு கடிதம் எழுதியது. அதில், சினிமா அரங்கு செயல்படுத்துவது ஏ.ஏ.ஐ சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படவில்லை என்பதால் மல்டிபிளக்ஸ்-ஐ மூட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, மீனாம்பாக்கம் ரியாலிட்டி டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகி இடைக்கால உத்தரவைப் பெற்றது. ஒரு நடுவர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு, பிப்ரவரி 2024 இல், ஜூலை 2023 கடிதத்தின் செயல்பாட்டை நிறுத்திவைத்தது. ஆனால், மே 15, 2025 அன்று மீனாம்பாக்கம் ரியாலிட்டி, ஏ.ஏ.ஐ உடனான அதன் 2018 மேம்பாட்டு ஒப்பந்தம் முன்கூட்டியே ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும், மொத்த வளாகத்தையும் ஏ.ஏ.ஐ சொந்தமாக பராமரிக்க முடிவு செய்துள்ளதாகவும் பி.வி.ஆர் ஐனாக்ஸ்-க்கு தெரிவித்தது.
இருப்பினும், மேம்பாட்டு ஒப்பந்தத்தின் பிரிவுகள் 42 மற்றும் 43, பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் துணை-உரிமதாரர்களைத் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க ஏ.ஏ.ஐ-க்கு அதிகாரம் அளிப்பதால், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டாலும், மல்டிபிளக்ஸ் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கக் கோரி பி.வி.ஆர் ஐனாக்ஸ் மே 29 அன்று ஏ.ஏ.ஐ-க்கு ஒரு கோரிக்கையை அளித்துள்ளது.