தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த மாநாட்டை தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. அதற்கேற்ப அரசியல் வியூகங்களை விஜய் அமைத்து வருகிறார். மற்றொரு பக்கம் தமிழக வெற்றிக்கழகத்தை அனைத்து நிலைகளிலும் பலப்படுத்தும் பணியையும் அவர் தொடங்கி உள்ளார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்சாரம், பால் கட்டண உயர்வுக்கு தமிழக அரசைக் கண்டித்தும் தீர்மானம் மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறை; நீட் தேர்வு ரத்து, இஸ்லாமியர் உரிமை உள்பட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விஜயை காலய்த்த முத்தரசன்
இந்நிலையில், அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார் விஜய் என்றும், அதனால் மாவு தான் வீணாக போகும் என்றும் கூறி காலய்த்துள்ளார் முத்தரசன்.
தி.மு.க கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தி.மு.க-வை எதிர்க்கவே விஜய் கட்சியை தொடங்கி இருக்கிறார். அதனால் தி.மு.க-வை எதிர்த்து பேசுகிறார்.
விஜய் அரைத்த மாவையே அரைத்து கொண்டிருக்கிறார்; இதனால் மாவுதான் வீணாகும். மேலும் கூட்டணி ஆட்சி குறித்து விஜய் பேசியிருப்பது, அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்றுதான் அழைப்போம். விஜய் கூட்டணியில் வி.சி.க இணையுமா என்றால், வி.சி.க தலைவர் திருமாவளவன்தான் பதிலளிக்க வேண்டும் அவர்தான் அந்த கட்சியின் தலைவர்" என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“