Raghava Lawrence Statement: நடிகர், இயக்குநர், நடன இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையோடு செயல்பட்டு வருபவர் ராகவா லாரன்ஸ்.
குறிப்பாக ஏழை, எளியோருக்கு சேவை செய்வதில் மிகுந்த நாட்டம் கொண்ட லாரன்ஸ், மாற்றுத் திறனாளிகள், மருத்துவ தேவை உள்ளவர்கள் என அனைவருக்கும் தன்னால் இயன்ற அளவு உதவி வருகிறார்.
இவர் தற்போது திடீரென அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"வளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை!" என அந்த அறிக்கை தொடங்கும் போதே, இது யாருக்கானதாக இருக்கும் என யோசிக்கத் தோன்றுகிறது.
அதன் பின்னர் அவர்ப் குறிப்பிடும் விஷயங்கள் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை பற்றிய அறிக்கை தான் இது என்பதை நெட்டிசன்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.
”நீங்கள் தான் முதன் முதலில் உங்களது மேடையில்,
எனது பெயரை இழுத்து, என்னையும் எனது ரசிகர்களையும், தன்னலமற்ற எனது சேவைகளையும்,
தரமற்ற முறையில் கொச்சைப்படுத்தி பேசினீர்கள்.
மனம் விட்டு பேசுவோம்! சுமூகமாகி அவரவர் வேலையை,
அவரவர் செய்வோம்! "நீங்களும் வாழுங்கள்!
"வாழவும் விடுங்கள்!"
இல்லை...... "இதை பிரச்னையாகத்தான் நானும் எனது தொண்டர்களும் அணுகுவோம்" என நீங்கள் முடிவெடுத்தால்....
அதற்கும் நான் தயார்!
"சமாதானமா?
"சவாலா?"
முடிவை நீங்களே எடுங்கள்!” என அந்த அறிக்கை முற்று பெற்றிருந்தது.
இந்நிலையில், இதைப்பற்றி பத்திரிக்கையாளர்கள் சீமானிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், “லாரன்ஸ் மீதும் அவருடைய சேவை மீதும் எப்போதும் எனக்கு மதிப்பு உண்டு. என் கட்சியைச் சார்ந்த யாராவது ஒருவர் புரிதல் இல்லாமல் விமர்சித்திருக்கலாம்.
அவ்வாறு செய்திருந்தால் அவர் யாரென்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். எனக்கும் என் கட்சிக்கும் கெட்டபெயர் உண்டாக்கும் நோக்கத்தில் பலர் சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளில் இயங்கி வருகின்றனர். அவர்கள் யாரேனும் கூட இப்படிச் செய்திருக்க வாய்ப்பு அதிகம். இருப்பினும் தம்பி லாரன்ஸிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இருப்பினும் இந்த மோதலைப் பற்றிய சரியான பின்னணி எதுவும் தெரியவில்லை.