ராகுல் காந்தி பாதுகாப்பில் குளறுபடி : திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பாதுகாப்பு வழங்கியதில் ஏற்பட்ட குளறுபடி குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுவிற்கு நான்கு வாரத்தில் பதில் அளிக்க மத்திய, மாநில அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
திமுக தலைவர் மு.கருணாநிதி, கடந்த 7ம் தேதி வயது மூர்ப்பு மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் 8 ஆம் தேதி அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக, அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்தது.
தேசிய தலைவர்கள், மாநில முதல்வர்கள், முக்கிய பிரமுகர்கள் சென்னை வந்து ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வந்தபோது அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும், காவல்துறையினர் அஜாக்கிரதையால் அவரது பாதுகாப்பில் பெரும் குளறுபடி ஏற்பட்டதாகவும், உயர் பாதுகாப்பு வளையத்தில் உள்ள அவருக்கு உரிய பாதுகாப்பு சென்னை காவல்துறை அளிக்கவில்லை என்று கூறியும், நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மிக முக்கிய பிரமுகர் பாதுகாப்பில் ஏற்பட்ட இந்த குளறுபடி ராகுல் காந்திக்கான பாதுகாப்பை கேள்விகுறியதாக்கியுள்ளது. எனவே இது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
அதே போன்று, அஞ்சலி செலுத்த வந்த பொதுமக்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நான்கு வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை செப்டம்பர் 14 ஆம் தேதி தள்ளிவைத்தனர்.