மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள விக்டோரியா எட்வர்டு மன்றம், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தனி நபரால் முறைகேடாக ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக கூறி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடி கள ஆய்வு மேற்கொள்ள விக்டோரியா எட்வர்டு மன்றத்திற்கு வருகை தந்தார்.
இதையடுத்து 50க்கும் மேற்பட்ட காவலர்கள், பாதுகாப்புக்காக விக்டோரியா எட்வர்டு மன்றம் வாயிலில் பூட்டு போட்டு, சீமானை உள்ளே செல்ல விடாமல் அனுமதி மறுத்தனர். காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து சீமான் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
பின்னர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், முதல்வர் நிமிடத்திற்கு நிமிடம் பாடுபடுகிறேன் எனக் கூறுகிறார். முதல்வர் பாடுபடுபவராக இருந்தால், அதனை எங்களை போன்ற பொதுவானவர்கள், மக்கள் சொல்ல வேண்டும். நம் முதல்வர் உழைக்கிறார், ஒய்வின்றி பாடுபடுகிறார் என மக்கள் சொல்ல வேண்டும்.
அவரே மேடைக்கு மேடை நான் உழைக்கிறேன் பாடுபடுகிறேன் என சொல்லக்கூடாது.
80 சதவீத பிரச்சனைகளை, திட்டங்களை செய்ததாக முதல்வர் கூறுகிறார். பிறகு ஒரு கூட்டத்தில் 70 சதவீத பிரச்சனைகளை சரி செய்து விட்டோம் என சொல்லுகிறார். 8 பிரச்சனைகளையாவது தீர்த்தார்களா என்பது தான் கேள்வி.
எதற்கு 1000 வழங்கும் திட்டம்? 1000 ரூபாய் கொடுப்பதற்கு பதிலாக, கல்வியை தரமாக கொடுங்கள்.
எங்களுக்கு படிக்க காசு இல்லை, அப்பா அம்மா வறுமையில் உள்ளார்கள் என மாணவிகளை கையேந்த வைப்பது புதுமை அல்ல. பெண்களுக்கு கல்வியை கொடுத்து வளமாக்க வேண்டும்.
பெண்கள் கல்வியை கற்று அதற்கேற்ற வேலையை பெற்று சம்பாதிக்க வேண்டும், அண்ணன், தம்பி, கணவன் யாரையும் சார்ந்து இல்லாமல் தன்காலில் நின்று உழைக்கும், வாழும் நிலையை உருவாக்குவதே புதுமை.
குடும்ப பெண்களுக்கு 1000 ரூபாய் கொடுக்கும் திட்டத்திற்கோ நிதி வலிமை, நிதி ஆதாரம் இல்லை என கூறினார்கள். ஆனால் கல்லூரி மாணவிகளுக்கு 1000ரூபாய் கொடுக்க 696 கோடி எப்படி வந்தது.
1000 ரூபாயை வைத்து ஒரு சிலிண்டர் வாங்க முடியுமா. 1000 ரூபாயை வைத்து எந்தக் கல்லூரியிலும் சேர முடியாது. இது ஆட்சி கிடையாது. ஷாருக்கான் சல்மான்கான், நடிகர் நடிகைகளை தான் மாடல் என்பார்கள்.
திராவிட மாடல் என சொல்லிக்கொண்டு பல ஆயிரம் கோடியில் விளம்பரம் மட்டும் தான் நடக்கிறது.
இந்தியாவை 50 ஆண்டுகள் ஆட்சி செய்து மாற்றத்தை கொண்டு வராத ராகுல்காந்தி நடை பயணம் மேற்கொண்டு மாற்றம் கொண்டு வருவாரா? என்ன மாற்றம் வரப்போகிறது. காலையும், மாலையும் நடப்பதால் அவருக்கு வேண்டுமானால் மாற்றம் வரலாம். மோடியை எதிர்க்க ராகுல் ஆள் இல்லை என்று சீமான் பேசினார்.
செய்தி: செந்தில், மதுரை