ரயில்வே – தபால் துறை இணைந்து பார்சல் சர்வீஸ்: தொழில் துறையினருக்கு வரப் பிரசாதம்

ரயில்வே மற்றும் தபால் துறையின் பரந்து விரிந்த சேவைகளின் மூலம் இந்த புதிய பார்சல் சேவை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டுசெல்லப்படும் என்று ரயில்வே வாரியத்தின், நிர்வாக இயக்குனர் சத்தியகுமார் கூறினார்.

railway, postal department, railway postal parcel service, Tamilnadu, indian railway

இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ரயில்வே மற்றும் தபால்துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், ரயில்வே வாரியத்தின், நிர்வாக இயக்குனர் சத்தியகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

‘கடந்த பட்ஜெட் அறிவிப்பின்போது ரயில்வே மற்றும் தபால் துறையை இணைத்து புதிய பார்சல் சேவை துவங்குவதற்கான திட்டம் வகுக்கப்பட்டது.

அந்த வகையில் மார்ச் 8ம் தேதி, சூரத் நகரில் இருந்து வாரணாசிக்கு ரயில்வே மற்றும் தபால் துறை இணைந்து புதிய பார்சல் சேவையை துவங்கியது. இந்த சேவையை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இரண்டு துறைகளை சேர்ந்த அதிகாரிகளை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இன்று கோவையில், இந்த புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த புதிய பார்சல் சேவையில் விமானங்களின் மூலம் பார்சல் கொண்டு செல்வது போன்று மிகவும் பாதுகாப்பான வகையில் பொருட்கள் எடுத்துச் செல்லப்படும்.

கனரக பொருட்களை எடுத்துச் செல்லும் வகையில் ரயில் பெட்டிகளில் அதற்கான நவீன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தற்போது ரயில்வே சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பார்சல் சேவையில் பார்சல்கள் ரயில் நிலையங்களுக்கு கொண்டுவரப்பட்டு மீண்டும் ரயில் நிலையங்களில் இருந்து எடுத்துச் செல்லப்படுகிறது.

இந்த புதிய பார்சல் சேவையில் வீடுகளில் இருந்து ரயில் நிலையத்திற்கு பார்சல்களை கொண்டு வருவதற்கும், ரயில் நிலையங்களில் இருந்து உரிய இடத்திற்கு கொண்டு சேர்க்கும் பணிகளையும் தபால் துறை மேற்கொள்கிறது. இடைப்பட்ட சேவையை ரயில்வேதுறை மேற்கொள்கிறது.

ரயில்வே மற்றும் தபால் துறையின் பரந்து விரிந்த சேவைகளின் மூலம் இந்த புதிய பார்சல் சேவை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டுசெல்லப்படும்.

மேலும், பார்சல்களின் நிலையை அறிவதற்காக பிரத்தியேக மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதில் பார்சல் எங்கு உள்ளது குறித்த பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.

இந்த சேவைகளுக்கான சரியான விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையின் மூலம் கனரக இயந்திரங்கள் உற்பத்தியாளர்கள் பெரிதும் பயன்பெற முடியும். சரியான விலையில் பாதுகாப்பான வகையில் கனரக பொருட்களை இதில் எளிதாக அனுப்ப முடியும்.

இயந்திர மற்றும் கனரக உதிரி பாகங்கள் உற்பத்தியாளர்கள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் இந்த சேவையால் பெரிதும் பயன்பெறுவர்.

கோவை மட்டுமின்றி திருப்பூர் பகுதியில் உள்ள ஜவுளி தொழில்துறையினரும், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இந்த சேவையில் பயன்பெறுவர்’ என தெரிவித்தார்.

செய்தி: பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Railway board executive director says railway and postal department parcel service best for industries

Exit mobile version