பயணிகளுக்கான ரயில் கட்டணத்தை ஜூலை 1, 2025 முதல் உயர்த்துவதற்கு இந்தியன் ரயில்வே திட்டமிட்டு இருந்தது. ஏசி ரயில், சாதாரண ரயில் கட்டணம் என அனைத்திலும் கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
சாதாரண ரயில் பயணிகளுக்கான கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசாவும் AC வகுப்பு பயணிகளுக்கான கட்டணம் 2 பைசா வரை உயரும் என்றும் தகவல்கள் வெளியாகின. புறநகர் ரயில் பயணிகளுக்கும், இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கு 500 கிலோமீட்டர் வரையிலும் கட்டண உயர்வு இருக்காது என்றும் 500 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்பவர்களுக்கு அரை பைசா மட்டுமே கட்டணம் உயரும் என்றும் கூறப்பட்டது. மாதந்திர சீசன் டிக்கெட்டுகளிலும் எந்த மாற்றமும் இல்லை என்று தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் இந்த திட்டம் பரிசீலனையில் உள்ளது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜூலை 1 ஆம் தேதி முதல் ரயில் பயணக் கட்டணத்தை ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா உயர்த்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக ரயில்வே இணை அமைச்சர் சோமன்னா தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்திற்கான இறுதி முடிவை பிரதமரும் ரயில்வே அமைச்சகமும் இணைந்து எடுப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த பெட்டி தொழிற்சாலையில் (ICF) செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் இதனை தெரிவித்தார்.