கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு கடந்த ஓராண்டுக்கு முன்பு ரயில் நடைமேடை கட்டணம் ரூ.50 என உயர்த்தப்பட்டது.
பின்னர், கொரோனா தொற்று குறைந்ததையடுத்து வழக்கம்போல் ரூ.10 நடைமேடை கட்டணமாக ரயில் நிலையங்களில் வசூலிக்கப்பட்டது.
இந்தநிலையில், பண்டிகை காலத்தையொட்டி, மீண்டும் ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை சென்டிரல், எழும்பூர், திருச்சி, கோவை, மதுரை, சேலம் உள்பட பல்வேறு ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆக கடந்த மாதம் உயர்த்தப்பட்டிருந்தது.
இந்த நடைமுறை அக்டோபர் 1-ம் தேதி முதல் ஜனவரி 31-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்று சென்னை ரெயில்வே கோட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தெரிவித்திருந்தது. இதற்கு பல்வேரு தரப்பிலும் கடும் எதிர்ப்பு நிலவியது.
இந்தநிலையில், பண்டிகை காலம் முடிந்த நிலையில் சென்னை, திருச்சி உள்பட 8 ரயில் நிலையங்களின் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.20-ல் இருந்து ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை சென்டிரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி, திருச்சி, கரூர், கும்பகோணம், விழுப்புரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.20-ல் இருந்து ரூ.10 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.
இந்த நடைமேடை டிக்கெட் கட்டணம் குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக சென்னை ரயில்வே மற்றும் திருச்சி, மதுரை கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயர்த்தப்பட்ட நடைமேடை டிக்கெட் கட்டணத்தில் ரூ.10 குறைக்கப்பட்டு உள்ளதால் ரயில் பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil