தென்மேற்கு பருவமழை அடுத்த இரண்டு நாட்களில் கேரளாவில் தொடங்க வாய்ப்புள்ளது. இதன் தாக்கம் தமிழகத்தின் சில பகுதிகளிலும் பரவக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இது வடக்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். மேலும், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி மே 27 அன்று உருவாகக்கூடும்.
இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் மே 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்காக சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.