வங்கக் கடலில் சென்னைக்கு கிழக்கு-வடகிழக்கே சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘மிக்ஜாம்’ புயல்’ ஆந்திராவின் நெல்லூர்- மசூலிபட்டினத்திற்கு இடையே நாளை டிசம்பர் 5-ம் தேதி கரையை கடக்கிறது. இதனால், சென்னைக்கு அதி கனமழை பொழியும் என்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் சென்னைக்கு கிழக்கு-வடகிழக்கே சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘மிக்ஜாம்’ புயல்’ தமிழ்நாட்டில் 21 இடங்களில் அதி கனமழையும், 59 இடங்களில் மிக கனமழை, 15 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அடுத்து வரும் இரு தினங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
திருவள்ளூரில் ஒரு சில இடங்களில் அதிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல, திருவண்ணாமலை, விழுப்புரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
05.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
06.12.2023 மற்றும் 07.12.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலகியது சென்னைக்கு ரெட் அலர்ட்
சென்னை மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் விலக்கி கொள்ளப்பட்டது. மிக் ஜாம் புயல் சென்னையை விட்டு மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து விலகிச் செல்லும் நிலையில், படிப்படியாக மழை குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் திருவள்ளூரை நோக்கி சென்றுள்ளதால், திருவள்ளூர் மாவட்டத்திற்கு, அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னையில் டிசம்பர் 3-ம் தேதி இரவு மழை பெய்தது போல, இன்று (டிசம்பர் 4) இரவு சென்னை முழுவதும் சூறைக்காற்றுடன் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னையில் இன்று இரவு 12 மணிவரை அதி கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“