சென்னையின் பலபகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த மழை தொடர வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர்.
சென்னையில் மழை பெய்துள்ளது தொடர்பாக, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, சென்னையில் கடந்த 3 நாட்களாக போக்கு காட்டிவந்த வானிலை தற்போது மாற துவங்கியுள்ளது. இதன்காரணமாக, சென்னையின் பலபகுதிகளில் மழை பெய்துள்ளது. சென்னையில் கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு இந்த மாலைவேளையில் வடமேற்கு திசை காற்றுடன், கடல்காற்று இணைந்து மழையாக பொழிந்து மக்களை குளிர்வித்துள்ளது. சென்னை மட்டுமல்லாது, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. தமிழகத்தின் உட்புற பகுதிகள், டெல்டா பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சிவகங்கை, புதுக்கோட்டை மக்கள் மழையை ரசிக்கலாம். மதுரைக்கும் மழை வாய்ப்பு உள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நாளை (14ம் தேதி)முதல் மழையை எதிர்பார்க்கலாம்.
கேரள மாநிலத்தின் பலபகுதிகளில் நல்ல மழை பெய்துவருகிறது. சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த வாரம் பெய்தது போன்ற பேய்மழைக்கு தற்போது வாய்ப்பு இல்லை, கவலை வேண்டாம். கேரளாவில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு. ஆனால் அதிக சேதம் இருக்க வாய்ப்பில்லை.
தெற்கு கேரளாவிலிருந்து வடக்கு கேரளாவிற்கு மாறி தற்போது மழை தெற்கு கர்நாடக பகுதியில் :ஊடுருவியிருப்பதால், குடகு பகுதியில், நாளைமுதல் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.
வானிலை ஆய்வாளர் செல்வகுமார் : சென்னையில் இன்று இரவு முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.